இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 20-ஆவது லீக் ஆட்டத்தில் கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியைத் தோற்கடித்தது.

இதன்மூலம் இந்த சீசனில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது கோவா. 5-ஆவது ஆட்டத்தில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது கோவா.

மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. இரு அணிகளும் சில கோல் வாய்ப்புகளை கோட்டைவிட, 41-வது நிமிடத்தில் கோலடித்தது கோவா. கோல் கம்பத்தின் வலது புறத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பில் ஜூலியோ சீஸர் மிக அற்புதமாக பந்தை கிராஸ் செய்தார்.

அப்போது வேகமாக முன்னேறிய ஃபெலிஸ்பினோ அதிவேகமாக கோல் கம்பத்தை நோக்கி பந்தைத் திருப்பி கோலாக்கினார். இதனால் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் கோவா 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் மும்பை அணி கடுமையாகப் போராட, 58-ஆவது நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பை கோட்டைவிட்டார் கோவாவின் சீஸர். கடைசி 10 நிமிடங்களில் ஸ்கோரை சமன் செய்ய கடுமையாகப் போராடியது மும்பை. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் கோவா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள கோவா ஒரு வெற்றி, ஒரு டிரா, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

ஆறு ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி 8 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டம்
கொல்கத்தா-டெல்லி
இடம்: கொல்கத்தா
நேரம்: இரவு 7 மணி.