2 கேட்ச்சை விட்டும் பெரிய பாதிப்பு இல்ல.. ஆஸ்திரேலியாவை தெறிக்கவிட்ட இந்திய பவுலர்கள்!!
இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையை சரித்துவிட்டனர் இந்திய பவுலர்கள்.
இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையை சரித்துவிட்டனர் இந்திய பவுலர்கள்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது போட்டி மெல்போர்னில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங்கை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ஃபின்ச் மற்றும் ஷார்ட் களமிறங்கினர். முதல் ஓவரின் முதல் பந்தில் ஷார்ட் சிங்கிள் எடுக்க, இரண்டாவது பந்தில் ஆரோன் ஃபின்ச்சை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார். ஒரு ரன்னுக்கே முதல் விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலிய அணி. முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் விழுந்ததை அடுத்து மைதானத்தில் குழுமியிருந்த இந்திய ரசிகர்கள் அரங்கமே அதிரும் அளவுக்கு ஆர்ப்பரித்தனர்.
இரண்டாவது ஓவரை கலீல் அகமது வீசினார். மீண்டும் புவனேஷ்வர் குமார் மூன்றாவது வீச, அந்த ஓவரில் இரண்டு கேட்ச்கள் தவறவிடப்பட்டன. மூன்றாவது ஓவரின் முதல் பந்தில் ஷார்ட் அடித்த பந்து எட்ஜ் ஆகி விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால் அந்த கேட்ச்சை ரிஷப் பண்ட் தவறவிட்டார். இதையடுத்து நான்காவது பந்தை கிறிஸ் லின் தூக்கி அடிக்க, பவுண்டரி லைனில் அழகாக பிடித்திருக்க வேண்டிய கேட்ச்சை பும்ரா தவறவிட்டதால் சிக்ஸர் ஆனது. இவ்வாறு புவனேஷ் வீசிய மூன்றாவது ஓவரில் மட்டுமே இரண்டு கேட்ச் வாய்ப்புகள் தவறவிடப்பட்டன.
எனினும் அந்த கேட்ச்களை தவறவிட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அவர்கள் இருவரையுமே கலீல் அகமது வெளியேற்றினார். 41 ரன்களுக்கே 4 விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலிய அணி. அதன்பிறகு அபாயகரமான அதிரடி வீரரான மேக்ஸ்வெல்லை 19 ரன்களில் கிளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார் குருணல் பாண்டியா. கடந்த போட்டியில் தனது பவுலிங்கில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் உட்பட வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல்லை இந்த முறை அவுட்டாக்கி அனுப்பினார் குருணல்.
13 ஓவருக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்களுடன் ஆடிவருகிறது ஆஸ்திரேலிய அணி.