காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த மீராபாய் சானுவின் வீட்டில் அவரது தாய் மற்றும் உறவினர்கள் நடனமாடி மகிழ்ச்சியுடன் மீராபாய் சானுவின் வெற்றியை கொண்டாடினர். அந்த வீடியோவை மீராபாய் சானு அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்துவருகிறது. இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிவருகின்றனர்.
குறிப்பாக பளுதூக்குதலில் மிகச்சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்துவருகின்றனர். மீராபாய் சானு, ஜெரெமி ஆகிய இருவரும் பளுதூக்குதலில் தங்க பதக்கமும், சங்கேத் சர்கார் மற்றும் பிந்தியாராணி தேவி ஆகிய இருவரும் வெள்ளி பதக்கமும், குருராஜா வெண்கல பதக்கமும் வென்றனர்.
இதையும் படிங்க - காமன்வெல்த் 2022: ஸ்மிரிதி மந்தனா அரைசதம்.. பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கிய இந்தியா
இவர்கள் அனைவருமே பளுதூக்குதலில் இந்தியாவிற்கு பதக்கங்களை வென்று கொடுத்துள்ளனர்.
மீராபாய் சானு தான் காமன்வெல்த்தில் முதல் தங்க பதக்கத்தை வென்று கொடுத்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்தியாவின் பதக்க பட்டியலை தொடங்கிவைத்தவர் மீராபாய் சானு தான். அதனால் அவர் மீது காமன்வெல்த்தில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்தியர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றிவிடாமல், தங்கம் வென்று சாதனை படைத்தார்.
காமன்வெல்த் பளுதூக்குதல் மகளிர் 49 கிலோ எடைப்பிரிவில் ஸ்னாட்ச் சுற்றில் 88 கிலோ மற்றும் க்ளீன்&ஜெர்க்கில் 113 கிலோ எடை என மொத்தம் 201 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்றார் மீராபாய் சானு.
தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்திய மக்களின் வாழ்த்து மழையில் நனைந்தார் சானு.
இதையும் படிங்க - செஸ் ஒலிம்பியாட்: 3வது சுற்றில் இந்தியாவின் ரோனக் சத்வானி, நந்திதா வெற்றி
இந்நிலையில், மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானுவின் சொந்த ஊரில் அவரது வீட்டில் அவரது தாய் மற்றும் உறவினர்கள் குழுவாக நடனமாடி மீராபாய் சானுவின் வெற்றியை மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடினர். அந்த வீடியோவை மீராபாய் சானு டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
