2017-ஆம் ஆண்டு நடந்த இலங்கை - இந்தியா போட்டியில் சூதாட்டம்; ஆதாரத்துடன் வெளியிட்டது அல்ஜசீரா...
கடந்த 2017-ஆம் ஆண்டு காலே நகரில் நடைபெற்ற இலங்கை - இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியில் சூதாட்டம் நடந்தது என்று அல்ஜசீரா தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கத்தாரைச் சேர்ந்த அல்ஜசீரா தொலைக்காட்சி ஸ்டிங் ஆப்ரேஷன் எனப்படும் ரகசிய செய்தி சேகரிப்பை மேற்கொண்டது. அதில் மேட்ச் பிக்சிங் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதன்படி, "கடந்த 2017 நவம்பர் மாதம் நடந்த இலங்கை - இந்தியா டெஸ்ட் போட்டியில் மைதானத்தின் ஆடுகளத்தை சாதகமாக மாற்றி அமைக்க ஆடுகள பராமரிப்பாளர்களுக்கு எதிரிகள் பணம் வழங்கியதாக தெரியவந்துள்ளது. இந்த மோசடி தொடர்பான முழு விவரம் அல்ஜசீராவில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த முதல் தர கிரிக்கெட் வீரர் ராபின் மோரிஸ், துபாயைச் சேர்ந்த இந்திய வணிகர் கெளரவ் ராஜ்குமார், காலே மைதான உதவி மேலாளர் தரங்கா இன்டிகா, இலங்கை வீரர் தரிண்டு மென்டிஸ் ஆகியோர் சேர்ந்து எவ்வாறு மேட்ச் பிக்சிங்கை செயல்படுத்துவது என ஆலோசனை நடத்துகின்றனர்.
இதை அல்ஜசீரா டிவியின் செய்தியாளர்கள் குழு ரகசிய கேமராக்களை வைத்து படம் பிடித்துள்ளது. ஆடுகளத்தை சுழற்பந்து அல்லது வேகப்பந்து வீச்சா எந்த வகையில் வேண்டுமானாலும் உருவாக்கலாம் என அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர்.
இலங்கை - இந்தியா போட்டியின்போது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஆடுகளம் அமைக்கப்பட்டது. ஆடுகளம் மிகவும் மோசமாக உருவாக்கப்பட்டு, சமன் செய்ய ரோலரும் பயன்படுத்தவில்லை. இதனால் அது சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்தது என மேலாளர் இன்டிகா அப்போது தெரிவித்துள்ளார்.
அல்ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்ட பரபரப்பான தகவலை அடுத்து இந்த புகார் தொடர்பாக உடனடி விசாரணைக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உத்தரவிட்டுள்ளது. மேலும், ஊழல் தடுப்பு குழுவினரும், அந்தந்த நாட்டு வாரிய அதிகாரிகளும் விசாரணையில் பங்கேற்றுள்ளனர்.