நூற்றாண்டு விழா சுழற்கோப்பையை கைப்பற்றியது லயோலா கல்லூரி…
திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை லயோலா கல்லூரி சாம்பியன் வென்று நூற்றாண்டு சுழற்கோப்பையை கைப்பற்றியது.
தூய வளனார் கல்லூரி சார்பில் நடத்தப்பட்ட நூற்றாண்டு விழா கோப்பைக்கான கைப்பந்து போட்டி கடந்த 23-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
இப்போட்டியில் திருச்சி, மதுரை, சிவகங்கை, கோவை, சென்னை பகுதிகளைச் சேர்ந்த 9 கல்லூரிகள் பங்கேற்றன.
நாக் அவுட் மற்றும் லீக் முறையில் போட்டிகள் நடைபெற்றன. அரையிறுதி லீக் போட்டிகளில், திருச்சி ஜமால் முகமது கல்லூரியை 18-25, 25-18, 25-22, 25-17 என்ற புள்ளிகள் கணக்கிலும், கோவை மருத்துவர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 25-20, 23-25, 25-18, 25-14 என்ற புள்ளிகள் கணக்கிலும், சென்னை டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியை 27-25, 25-21, 25-20 என்ற புள்ளிகள் கணக்கிலும் சென்னை லயோலா கல்லூரி வென்றது.
பங்கேற்ற 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் நூற்றாண்டு விழா சுழற்கோப்பையை லயோலா கல்லூரி கைப்பற்றியது.
சென்னை டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியை 18-25, 25-18, 25-22, 25-17 என்ற புள்ளிகள் கணக்கிலும், கோவை மருத்துவர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 25-18, 25-16, 25-13 என்ற புள்ளிகள் கணக்கிலும் வென்று திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணி 2ஆவது இடத்தைப் பிடித்தது.
கோவை மருத்துவர் என்.ஜி.பி. கல்லூரியை 25-18, 30-28, 23-25, 25-18 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று சென்னை டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், கல்லூரியின் பொருளாதாரத் துறை பேராசிரியர் கே.ஆரோக்கியதாஸ் வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.
கல்லூரிச் செயலர் ஏ.அந்தோனி பாப்புராஜ், உடற்கல்வி இயக்குநர் ஏ.பிரேம் எட்வின், உதவி உடற்கல்வி இயக்குநர் எஸ்.ரெனில்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.