இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் மீது கொலை வழக்கு பதிவு..! தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு
ஒலிம்பிக்கில் 2 முறை இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு, கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக லுக் அவுட் நோட்டீஸை டெல்லி போலீஸார் பிறப்பித்துள்ளனர்.
ஒலிம்பிக்கில் 2 முறை இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்த மல்யுத்த வீரர் சுஷில் குமார். சுஷில் குமாரை சாகர் தன்கட் தொடர்ந்து விமர்சித்துவந்ததாக கூறப்படுகிறது. அதனால் கடும் கோபமடைந்து, சாகருக்கு பாடம் கற்பிக்க விரும்பிய சுஷில் குமார், கடந்த வாரம் செவ்வாய்கிழமை சாகர் தன்கட்டை அவரின் வீட்டிலிருந்து தனது நண்பர்களின் உதவியுடன் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கிற்கு அழைத்து வந்தனர். அங்கு வைத்து அவரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு சுஷில் குமாரும், அவரின் நண்பர்களும் தப்பிவிட்டனர்.
படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாகர் தான்கட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால், சுஷில் குமார் மீதான வழக்கு கொலை வழக்காக பதியப்பட்டுள்ளது.
மல்யுத்த வீரர் சுஷில் குமார் இந்த வழக்கிலிருந்து தப்ப, வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுவிடாமல் தடுக்க, தேடப்படும் குற்றவாளியாக அவரை அறிவித்து, லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது டெல்லி போலீஸ்.