krunal pandya speaks about match winning and his brother hardik

ரோஹித், பும்ராவை போல மும்பை அணி இழக்க விரும்பாத இரண்டு வீரர்கள் பாண்டியா பிரதர்ஸ். குருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரையும் மும்பை அணி தொடர்ந்து தக்கவைத்து கொண்டுவருகிறது.

இருவருமே ஆல்ரவுண்டர்கள். நடந்துவரும் ஐபிஎல் 11வது சீசனில் குருணல் பாண்டியா, பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் ஓரளவிற்கு பங்களிப்பு செய்துவருகிறார். ஆனால், ஹர்திக் பாண்டியா பெரிதாக சோபிக்கவில்லை. ஃபீல்டிங்கில் சொல்லவே தேவையில்லை. ஹர்திக் பாண்டியா மிகச்சிறந்த ஃபீல்டர். அசாத்தியமான கேட்ச்களை பிடித்து அசத்துகிறார். ஆனால் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் பெரிதாக சோபிக்காமல் இருந்தார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், முன்வரிசையில் இறக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, அதிரடியாக ஆடி மந்தமாக இருந்த மும்பை அணியின் ரன் வேகத்தை மளமளவென உயர்த்தினார். இதன்மூலம் மும்பை அணி உத்வேகம் அடைந்தது. இறுதியில் ரோஹித்தை விட களத்தில் ஆதிக்கம் செலுத்திய குருணல் பாண்டியா, அதிரடியாக ஆடி வெற்றியை உறுதி செய்தார். 12 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார் குருணல் பாண்டியா.

கடந்த முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை அணி, இந்த முறை இக்கட்டான நிலையில் உள்ளது. எஞ்சிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இப்படியான இக்கட்டான நிலையில், பாண்டியா பிரதர்ஸ் நல்ல ஃபார்முக்கு மீண்டு வந்திருப்பது மும்பை அணிக்கு தேவையான ஒன்று.

நேற்றைய போட்டியின் கடைசி தருணத்தில் அதிரடியாக ஆடி அசத்திய குருணல் பாண்டியா, போட்டிக்கு பின்னர் பேசியபோது, தனது பேட்டிங் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். அப்போது பேசிய குருணலிடம், உங்களுக்கும் ஹர்திக்கும் இடையே போட்டி நிலவுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குருணல், அப்படியெல்லாம் கிடையாது. ஹர்திக் பேட்டிங் ஆடும்போது நான் அழுத்தத்தில் இருப்பேன். அதேபோலத்தான் அவருக்கும்.. நான் பேட்டிங் ஆடும்போது அவர் டென்ஷனாக இருப்பார் என தெரிவித்தார்.

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் என்னால் பேட்டிங்கில் சிறந்த பங்களிப்பை அளிக்க முடியவில்லை என வருத்தமாக இருந்தது. ஆனால் இந்த போட்டியில் நான் ஆடியவிதம், எனக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என குருணல் தெரிவித்தார்.