இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் அட்லெடிகோ டி கொல்கத்தா-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இந்த ஆட்டத்தில் 5-ஆவது நிமிடத்திலேயே நார்த் ஈஸ்ட் அணி முன்னிலை பெற்றது. கடைசி நிமிடத்தில் ஹியூம் அடித்த கோலால் தோல்வியிலிருந்து தப்பியது கொல்கத்தா.

கொல்கத்தாவில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 5-ஆவது நிமிடத்தில் கொல்கத்தா பின்கள வீரர் செய்த தவறால் பந்து நார்த் ஈஸ்ட் வீரர் வெலஸ் வசமானது. அப்போது கொல்கத்தாவின் கோல் கீப்பர் மஜும்தார் கோல் கம்பத்தை விட்டு நகர, மிக எளிதாக கோலடித்தார் வெலஸ்.

இதன்பிறகு கொல்கத்தா அணி கடுமையாகப் போராடியபோதும், முதல் பாதி ஆட்டத்தில் கோலடிக்க முடியவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் நார்த் ஈஸ்ட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தில் கோலடிக்க வேண்டிய நெருக்கடியில் களமிறங்கிய கொல்கத்தா அணி, 89-ஆவது நிமிடம் வரை கோலடிக்கவில்லை. இதனால் ஆட்டம் சமனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி நிமிடத்தில் கொல்கத்தாவுக்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. அதில் லாரா பந்தை கோல் கம்பத்தை நோக்கி உதைத்தார். அந்த பந்து கோல் கம்பத்துக்கு இடதுபுறம் நின்ற போஸ்டிகா அருகே செல்ல, அவர் பந்தை தலையால் முட்டி வலது புறமாகத் திருப்பினார்.

அப்போது அங்கு நின்ற இயான் ஹியூம் மிக எளிதாக கோலடித்தார்.

இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.