kohli opinion about failure against csk

சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான 35வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது.

புனேவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் ஆடிய பெங்களூரு அணியின் மெக்கல்லம், கோலி, டிவில்லியர்ஸ் ஆகிய முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து வெளியேறினர். 

மந்தீப் சிங், கோலின் டி கிராண்ட்ஹோம், முருகன் அஸ்வினும் ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர். அதிரடியாகவும் பொறுப்பாகவும் ஆடிய பார்த்திவ் படேல் மட்டும் அரைசதம் கடந்தார். ஆனால் அவரும் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். டிம் சௌதி 36 ரன்கள் எடுத்தார். பார்த்திவ் படேலின் அரைசதம் மற்றும் சௌதியின் கடைசி நேர அதிரடியால், பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது.

128 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, தோனியின் அதிரடியால், 18வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. 

போட்டிக்கு பின்னர் பேசிய பெங்களூரு அணி கேப்டன் கோலி, இந்த நாள் எங்களுக்கானதாக இல்லை. விரைவில் அதிகமான விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். ஆனால் இலக்கை எட்டவிடாமல் தடுக்க பெரும் முயற்சி செய்தோம். சில கேட்ச்களை தவறவிட்டதால் தோல்வியடைய நேரிட்டது. இந்த பிட்ச் ஆச்சரியமளித்தது. எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக போராடினார்கள். இருந்தும் தோற்றுவிட்டோம். எஞ்சியுள்ள 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதுபோன்ற சூழ்நிலைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொணரும் என கோலி தெரிவித்தார்.