இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் கே.எல்.ராகுல் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், "விசாகப்பட்டினத்தில் வரும் 17-ஆம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் கே.எல்.ராகுலை சேர்க்க அகில இந்திய சீனியர் தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
வலது தொடை காயத்தில் இருந்து முழுவதும் மீண்டுள்ள ராகுல், செவ்வாய்க்கிழமை அணியில் இணைவார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கர்நாடக அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் விளையாடி வரும் ராகுல், ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 76, இரண்டாவது இன்னிங்ஸில் 106 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதால், கெளதம் கம்பீர் பிளேயிங் லெவனில் இருந்து வெளியேற்றப்படுவார் எனத் தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 29 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த கம்பீர், 2-ஆவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார்.
"ராகுல் தொடக்க வீரராக ஆட வேண்டும்': இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே கூறியதாவது:
“கான்பூர் போட்டியில் காயமடைந்த ராகுல், நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. காயத்திலிருந்து மீண்ட அவர், விதிமுறைப்படி ரஞ்சிக் கோப்பையில் விளையாடியுள்ளார். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்துள்ளார். தற்போது அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர், தொடக்க வீரராக களமிறங்க விரும்புகிறேன்” என்று கும்ப்ளே கூறினார்.
