Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் கடந்த வாரம் நடந்தது.

இந்த போட்டியின் ஒற்றையர் பிரிவு 2–வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ் 3–6, 1–6 என்ற நேர்செட்டில் ஜெர்மனி வீரர் மிஸ்சா ஸ்வெரேவிடம் எளிதில் தோல்வி கண்டு வெளியேறினார்.

இந்த ஆட்டத்தில் கிர்ஜியோஸ் போட்டியின் உத்வேகத்தை கெடுக்கும் வகையில் ஏனோ, தானோ வென்று மெத்தனமாக செயல்பட்டார். மைதான நடுவர் அவருக்கு எச்சரிக்கை விடுத்தும் அவர் அதனை பொருட்படுத்தவில்லை.

தனக்கு எதிராக முழக்கமிட்ட இரசிகர்களுடன் கிர்ஜியோஸ் மோதல் போக்கை கடைப்பிடித்தார். தனது செயலுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியம் எதுவுமில்லை என்று முதலில் கருத்து தெரிவித்த கிர்ஜியோஸ் பின்னர் டுவிட்டர் மூலம் வருத்தம் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச ஆண்கள் டென்னிஸ் சம்மேளனம் கிர்ஜியோஸ்க்கு போட்டி காலத்தில் 8 வாரங்கள் விளையாட தடை விதித்துள்ளது.

அவர் தங்களின் அறிவுறுத்தலின் படி விளையாட்டு மனநல மருத்துவரின் ஆலோசனைக்கு உட்பட்டு செயல்பட சம்மதித்தால் அவரது தடை காலம் 3 வாரமாக குறைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

அத்துடன் அவருக்கு ரூ.16 இலட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு ரூ.11 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.

‘சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தின் தடையை மதித்து செயல்படுவேன். எனது செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் தடை காலத்தை பயன்படுத்தி கொண்டு மீண்டும் களம் திரும்புவேன்’ என்று கிர்ஜியோஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

அத்துடன் நடந்த சம்பவத்துக்காக மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.