தம்பிக்காக விட்டுக்கொடுத்தாரா கம்ரான் அக்மல்..? கடுப்பான ரஷீத் கான்
டி10 லீக் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலின் அலட்சியமான விக்கெட் கீப்பிங், பவுலர் ரஷீத் கானை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கடுப்பாக்கியது.
டி10 லீக் போட்டி ஒன்றில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலின் அலட்சியமான விக்கெட் கீப்பிங், பவுலர் ரஷீத் கானை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் கடுப்பாக்கியது.
டி20 லீக் தொடர்களை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் 10 ஓவர்களை கொண்ட டி10 லீக் தொடர் ஆடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு டி10 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. 8 அணிகள் கலந்துகொண்டு ஆடும் இந்த தொடரில் உலகின் முன்னணி வீரர்களும் முன்னாள் வீரர்களும் கலந்துகொண்டு ஆடிவருகின்றனர்.
கடந்த 21ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் டிசம்பர் 2ம் தேதி வரை நடக்கிறது. இதில் டுவைன் பிராவோ தலைமையிலான மராத்தா அரேபியன்ஸ் மற்றும் லூக் ரோஞ்சி தலைமையிலான பஞ்சாபி லெஜண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதிய போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணி 10 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்தது. 122 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மராத்தா அரேபியன்ஸ் அணி 9.2 ஓவரில் 78 ரன்களுக்கே ஆல் அவுட்டானதை அடுத்து பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியில் பாகிஸ்தானின் உமர் அக்மலும் அவரது அண்ணன் கம்ரான் அக்மல் மராத்தா அரேபியன்ஸ் அணியிலும் ஆடிவருகின்றனர். இந்த போட்டியில் பஞ்சாபி லெஜண்ட்ஸ் அணியின் பேட்டிங்கின்போது 8வது ஓவரை ரஷீத் கான் வீசினார். அந்த ஓவரின் 5வது பந்தை உமர் அக்மல் இறங்கிவந்து அடிக்கமுயன்றார். ஆனால் ரஷீத் கான் ஆஃப் திசையில் விலக்கி வீசியதால் அந்த பந்தை அவரால் அடிக்க முடியாமல் விட்டார். அந்த பந்தை பிடித்து எளிமையாக உமர் அக்மலை ஸ்டம்பிங் செய்திருக்கலாம். ஆனால் அந்த பந்தை அலட்சியமாக பிடிக்க முயன்று விட்டுவிட்டார் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல்.
Aakhir ek Bhai he mushkil waqt dosre bhai k kaam aata hai... pic.twitter.com/dweT72TsxW
— Taimoor Zaman (@taimoorze) November 22, 2018
கம்ரான் அக்மலின் செயலால் ரஷீத் கான் அதிருப்தியடைந்தார். எளிமையாக வீழ்த்தியிருக்க வேண்டிய விக்கெட் அது. தம்பிக்காக வேண்டுமென்றே விட்டாரா என்று தோன்றுமளவுக்கு இருந்தது அது. எனினும் அடுத்த ஓவரில் கம்ரானிடம் கேட்ச் கொடுத்துத்தான் வெளியேறினார் உமர். எனினும் அந்த ஸ்டம்பிங்கை விட்டது மிகப்பெரிய கொடுமை.