பிரபல கபடி வீரரான ரோஹித் குமாரின் மனைவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அவரை மும்பையில் தில்லி காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரோஹித்தின் தந்தை விஜய் சிங்கும் தில்லியில் உள்ள காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தார்.

ரோஹித் குமாரின் மனைவி லலிதா, தில்லியில் உள்ள அவரது பெற்றோரின் இல்லத்தில் கடந்த திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான காரணத்தை விடியோ பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விடியோவில், கணவரின் பெற்றோர் தன்னைத் துன்புறுத்தியதாகவும், தனது வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லுமாறு ரோஹித் தெரிவித்ததாகவும் லலிதா குறிப்பிட்டுள்ளார்.

லலிதா தற்கொலை செய்துகொண்ட பிறகு, ரோஹித்தின் பெற்றோர் தலைமறைவாகி விட்டனர். ரோஹித் மற்றும் அவரது பெற்றோருக்கு எதிராக தில்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், மும்பையில் இருந்த ரோஹித் குமாரை தில்லி காவல்துறையினர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, அவரது தந்தை விஜய் சிங், தில்லி நங்லோய் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தில்லி காவல் துறையில் விஜய் சிங் துணை ஆய்வாளராக பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர் ஆவார்.
இதுகுறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறியபோது, "இந்தியக் கடற்படையில் பணிபுரியும் ரோஹித் குமார், மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் தில்லிக்கு விசாரணைக்காக அழைத்து வரப்படுவார்” என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, தில்லி நீதிமன்றத்தில் விஜய் சிங் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 4-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கைதுக்கு முன்பாக, "வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தவில்லை என்பது எனது மனைவியின் தந்தைக்குத் தெரியும். காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பேன். எனது மனைவியை நான் மிகவும் நேசிக்கிறேன். உண்மை தெரியவரும்' என்று முகநூலில் ரோஹித் குமார் தெரிவித்திருந்தார்.