இவரா இப்படி செஞ்சாரு..? கிரிக்கெட் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய ஜடேஜா
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து இரண்டு கேட்ச்சை ஜடேஜா தவறவிட்டது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், சீனியர் கிரிக்கெட்டர்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து, சென்னை அணி தடை செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகளை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் சென்னை அணியால் தக்கவைக்கப்பட்டவர் ரவீந்திர ஜடேஜா. ரவீந்திர ஜடேஜாவை சென்னை அணி இழக்கவில்லை.
நல்ல ஸ்பின்னர், பேட்ஸ்மேன் என்பதைக் கடந்து, ஜடேஜா ஒரு மிகச்சிறந்த ஃபீல்டர். இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபீல்டர்களில் ஒருவர். அசாத்திய கேட்ச்களை அசால்ட்டாக பிடிப்பதிலும் விரைந்தோடும் பந்துகளை விரட்டி பிடிப்பதிலும் ஜடேஜா வல்லவர்.
ஐபிஎல் மட்டுமல்லாமல், சர்வதேச கிரிக்கெட்டிலும் பல சிறந்த கேட்ச்களை பிடித்துள்ளவர். இந்த ஐபிஎல் தொடரில் கூட ஒரு போட்டியில் சிறந்த கேட்ச் பிடித்ததற்கான அவார்டு வாங்கினார்.
இக்கட்டான நேரங்களில் முக்கியமான ஃபீல்டிங் பொசிசனில் தோனியின் பிரதான தேர்வு என்பது ரெய்னா அல்லது ஜடேஜாவாகத்தான் இருக்கும். அந்தளவிற்கு ஃபீல்டிங்கில் தோனியின் நம்பிக்கையை பெற்றவர்.
மிகச்சிறந்த ஃபீல்டரான ஜடேஜா, நேற்றைய போட்டியில், அடுத்தடுத்து இரண்டு கேட்ச்களை தவறவிட்டது, கிரிக்கெட் ரசிகர்களையும் தோனியையும் அதிர்ச்சியடைய செய்தது.
சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில், சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவருக்கு 177 ரன்கள் எடுத்தது. 178 ரன்கள் என்ற இலக்குடன் சுனில் நரைனும் கிறிஸ் லின்னும் களமிறங்கினர்.
அப்போது, ஆசிஃப் வீசிய இரண்டாவது ஓவரை சுனில் நரைன் எதிர்கொண்டார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் நரைன் கொடுத்த கேட்ச்சை மிட் ஆட்ஃப் திசையில் நின்ற ஜடேஜா தவறவிட்டார். அதற்கு அடுத்த பந்திலேயே மறுபடியும் நரைன் தூக்கி அடிக்க, அந்த கேட்ச்சையும் ஜடேஜா தவறவிட்டார்.
அடுத்தடுத்து இரண்டு கேட்ச்களை ஜடேஜா தவறவிட்டது ஆச்சரியத்துக்கு உரியதுதான். கடினமான கேட்ச்களையே எளிதாக பிடித்துவிடும் சிறந்த ஃபீல்டரான ஜடேஜா, எளிதான கேட்ச்களை தவறவிட்டது கிரிக்கெட் உலகில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.