ஐஎஸ்எல் அப்டேட்: சென்னையின் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் இன்று மோதல்...
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டத்தில் சென்னையின் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் மோதும் அரையிறுதியின் முதல் பகுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
சென்னை அணி மொத்தம் 18 லீக் ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 4 தோல்வி, 5 டிரா என 32 புள்ளிகளுடன், பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
கோவா அணி 9 வெற்றி, 6 தோல்வி, 3 டிராவுடன் 30 புள்ளிகளோடு 3-வது இடத்தில் இருக்கிறது.
இந்த இரண்டு அணிகளுமே லீக் சுற்றில் இருமுறை சந்தித்துள்ளன. சென்னையில் முதலில் மோதிய ஆட்டத்தில் கோவா 3-2 என்ற கணக்கில் வென்றது. அடுத்து கோவாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை 1-0 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுத்தது. மொத்தமாக இந்த அணிகள் 9 முறை மோதிக் கொண்டதில், சென்னை 5 வெற்றியையும், கோவா 4 வெற்றியையும் பதிவு செய்துள்ளன.
இந்த சீசனில் சென்னை அணியைப் பொருத்த வரையில் லீக் ஆட்டத்தில் 24 கோல்கள் அடித்துள்ளது. ஆனால், கோவா 42 கோல்கள் அடித்துள்ளது.
இதுகுறித்து அணியின் நட்சத்திர வீரர் ஜேஜே, "தாக்குதல் ஆட்ட வீரர்களால் கோல் அடிக்க இயலாத சூழலில், களத்தில் இருக்கும் ஹென்றிக், தனபால், இனிகோ, மெயில்சன் உள்ளிட்ட வீரர்களும் முன்னேறிச் சென்று கோலடிக்கின்றனர். இதற்கு நல்ல உடல்தகுதியும், மனத் தைரியமுமே காரணம்" என்று கூறினார்.