விக்கெட் வீழ்த்தும் முறையில் பந்துவீச வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா, கற்றுக்கொள்ள வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, “இஷாந்த் சர்மா மிகச்சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் சந்தேகம் இல்லை. தகுந்த உயரத்தோடு இருக்கும் அவர், மிகச்சரியாக வேகப்பந்துகளை வீசுகிறார்.
ஆனால், விக்கெட்டுகளை வீழ்த்துவது எவ்வாறு என்பதை அவர் கற்றுக்கொள்ள வேண்டும். அதில்தான் அவர் சற்று தடுமாறுகிறார்.
விக்கெட் வீழ்த்தும் வகையிலான பந்துவீச்சை அவர் கற்றுக்கொண்டால், முக்கியமான தருணங்களில் அணிக்கு உதவியாக இருக்கும். பந்துவீச்சாளர்களைப் பொருத்தவரையில், ஒரு ஓவரில் 5 பந்துகளை மிகச் சரியாக வீச வேண்டும். அப்போது தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.
தற்போதைய கிரிக்கெட்டில், ஆண்டுக்கு 10 மாதங்கள் விளையாட வேண்டியுள்ளது. காயங்களுக்கு வாய்ப்பு உள்ளதால், ஒரு ஆல் ரவுண்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரு துறைகளிலும் சிறப்புடன் செயல்படுவது அவ்வளவு எளிதாக இருக்காது என்று கபில் தேவ் கூறினார்.
சிக்குன்குனியா காய்ச்சல் காரணமாக நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் சேர்க்கப்படாத இஷாந்த் சர்மா, தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
