பத்தாவது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக ரூ.14.5 கோடிக்கு ஏலம் போனார். அவரை ரைஸிங் புணே சூப்பர்ஜயண்ட்ஸ் அணி வாங்கியது.
பென் ஸ்டோக்ஸுக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அதைவிட 7 மடங்கு அதிக விலைக்கு ஏலம் போயிருக்கிறார்.
அவருக்கு அடுத்தபடியாக மற்றொரு இங்கிலாந்து வீரரான டைமல் மில்ஸை ரூ.12 கோடிக்கு வாங்கியது பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ். இவர், தனது அடிப்படை விலையைவிட (ரூ.50 லட்சம்) 24 மடங்கு அதிக விலைக்கு ஏலம் போயிருக்கிறார்.
பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் திடீரென விலகினார். அந்த இடத்தை நிரப்பும் வகையில் வேகப்பந்து வீச்சாளரான டைமல் மில்ஸை ரூ.12 கோடி கொடுத்து வாங்கியுள்ளது பெங்களூர் அணி.
ஸ்டோக்ஸுக்கு கடும் போட்டி
பெங்களூரில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பென் ஸ்டோக்ஸை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியது. அவருடைய பெயர் ஏலத்திற்கு வந்தபோது அவரை வாங்க மும்பை, டெல்லி, பெங்களூர் அணிகள் ஆர்வம் காட்டின. ஆனால் ஏலத் தொகை ரூ.10.5 கோடியை எட்டியபோது மும்பை அணி போட்டியிலிருந்து விலகியது.
இதையடுத்து டெல்லியும், பெங்களூரும் தீவிரம் காட்ட, ஹைதராபாத் அணி ரூ.12.5 கோடிக்கு ஏலம் கேட்டது. இதன்பிறகு ஏலத்தில் குதித்த புணே அணி ரூ.13 கோடிக்கு கேட்டது. அதைத் தொடர்ந்து போட்டி நிலவ, இறுதியில் ரூ.14.5 கோடிக்கு பென் ஸ்டோக்ஸை வாங்கியது புணே.
மற்றொரு இங்கிலாந்து ஆல்ரவுண்டரான கிறிஸ் வோக்ஸை ரூ.4.2 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா. அதேநேரத்தில் இங்கிலாந்து அணியின் தற்போதைய கேப்டனான இயான் மோர்கன் (அடிப்படை விலை ரூ.2 கோடி), தொடக்க வீரர் ஜேசன் ராய் (அடிப்படை விலை ரூ.1 கோடி), ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான் (ரூ.50 லட்சம்) ஆகியோரை அவர்களின் அடிப்படை விலைக்கே முறையே பஞ்சாப், குஜராத், ஹைதராபாத் அணிகள் வாங்கின.
