நியூசிலாந்தில் இந்திய அணியின் இரண்டாவது டாப் ஸ்கோர் இதுதான்!!
கடைசி 10 ஓவர்களில் இவர்கள் இருவரையும் அடித்து ஆடவிடாமல் ஸ்லோ டெலிவரிகளை வீசி கட்டுப்படுத்தினர் நியூசிலாந்து பவுலர்கள். எனினும் அவ்வப்போது தோனியும் ராயுடுவும் போராடி சில பவுண்டரிகளை அடித்தனர்.
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகிய இருவரும் அபாரமாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 154 ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் கடந்து அருமையாக ஆடிவந்த நிலையில் தவானை 66 ரன்களில் டிரெண்ட் போல்ட் வெளியேற்றினார்.
இதையடுத்து ரோஹித் சர்மாவுடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். சதத்தை நெருங்கிய ரோஹித் சர்மா, 87 ரன்களில் ஃபெர்குசனின் ஸ்லோ டெலிவரியில் விக்கெட்டை பறிகொடுத்து சதத்தை தவறவிட்டார். அதன்பிறகு கேப்டன் கோலியுடன் ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன் வேகத்தை குறைக்காமல் பார்த்துக்கொண்டது. இருவருமே சீரான வேகத்தில் ரன்களை சேர்த்துவந்த நிலையில், டிரெண்ட் போல்ட்டின் பவுன்ஸரில் 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார் கோலி.
பின்னர் ராயுடுவுடன் தோனி ஜோடி சேர்ந்தார். கடைசி 10 ஓவர்களில் இவர்கள் இருவரையும் அடித்து ஆடவிடாமல் ஸ்லோ டெலிவரிகளை வீசி கட்டுப்படுத்தினர் நியூசிலாந்து பவுலர்கள். எனினும் அவ்வப்போது தோனியும் ராயுடுவும் போராடி சில பவுண்டரிகளை அடித்தனர். ராயுடு அரைசதத்தை தவறவிட்டு 47 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் கேதர் ஜாதவின் அதிரடியால் அந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் குவிக்கப்பட்டன. இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்களை குவித்தது. தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 48 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்தில் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 2009ம் ஆண்டு கிறிஸ்ட்சர்ச்சில் இந்திய அணி அடித்த 393 ரன்கள் தான் அதிகமான ஸ்கோர். அதற்கடுத்த அதிக ஸ்கோராக தற்போது அடிக்கப்பட்டுள்ள 324 ரன்கள் உள்ளது. 2014ம் ஆண்டு ஆக்லாந்தில் அடித்த 314 ரன்கள், மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.