இந்தியா பெற்றது சாதாரண வெற்றி இல்ல.. சாதனை வெற்றி!! நியூசிலாந்திடம் செம சம்பவம் செய்த கோலி படை
சொந்த மண்ணில் மிகவும் எளிதாக 300 ரன்களுக்கு மேல் குவித்து பழகிய நியூசிலாந்து அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது மிகப்பெரிய சாதனைதான். தார்மீக ரீதியில் மட்டுமல்லாமல் அதிகாரப்பூர்வமாகவும் இது மிகப்பெரிய சாதனைதான்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.
முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை 157 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, இலக்கை எளிதாக எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதையடுத்து மவுண்ட் மாங்கனியில் இன்று நடந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணியிடம் படுதோல்வியடைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் - தவான் அமைத்து கொடுத்த வலுவான அடித்தளத்தால் 50 ஓவர் முடிவில் 324 ரன்களை குவித்தது. 325 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 166 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பிறகு பிரேஸ்வெல் தனி ஒருவனாக நின்று இந்திய அணியின் பவுலிங்கை அடித்து ஆடி அரைசதம் கடந்தார். எனினும் அவரும் 57 ரன்களில் ஆட்டமிழக்க, 40.2 ஓவரில் 234 ரன்களுக்கு அந்த அணி ஆல் அவுட்டானது.
இதையடுத்து 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. சொந்த மண்ணில் மிகவும் எளிதாக 300 ரன்களுக்கு மேல் குவித்து பழகிய நியூசிலாந்து அணியை 90 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது மிகப்பெரிய சாதனைதான். தார்மீக ரீதியில் மட்டுமல்லாமல் அதிகாரப்பூர்வமாகவும் இது மிகப்பெரிய சாதனைதான்.
90 ரன்கள் வித்தியாசத்தில் இன்று பெற்ற வெற்றிதான், இந்திய அணி நியூசிலாந்தில் அந்த அணிக்கு எதிராக பெற்ற மிகப்பெரிய வெற்றி. இதற்கு முன்னதாக 2009ம் ஆண்டு ஹாமில்டனில் நடந்த போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றிருந்ததுதான் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணி இந்த போட்டியில் அடித்த 324 ரன்கள் தான் நியூசிலாந்தில் அந்த அணிக்கு எதிராக இந்திய அணி அடித்த இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர்.