இறுதிச்சுற்றில் இன்று மோதுகிறது இந்திய இரயில்வே – கேரளா அணிகள்…
65-ஆவது தேசிய சீனியர் கைப்பந்து போட்டியின் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் இந்திய இரயில்வே மற்றும் கேரள அணிகள் இறுதிச்சுற்றில் இன்று மோதுகிறது.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் பிரிவு முதல் அரையிறுதியில் இந்திய இரயில்வே அணி 25-12, 25-12, 25-10 என்ற நேர் செட்களில் ஆந்திர அணியையும், 2-ஆவது அரையிறுதியில் கேரள அணி 25-18, 21-25, 25-21, 25-14 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிர அணியையும் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறின.
பின்னர் நடைப்பெற்ற ஆடவர் பிரிவு முதல் அரையிறுதியில் இந்திய இரயில்வே அணி 25-17, 25-22, 22-25, 25-23 என்ற செட் கணக்கில் பஞ்சாப் அணியைத் தோற்கடித்தது.
2-ஆவது அரையிறுதியில் கேரள அணி 19-25, 25-19, 25-23, 25-17 என்ற செட் கணக்கில் தமிழக அணியைத் தோற்கடித்தது.
இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் மகளிர் இறுதிச்சுற்றில் இந்திய இரயில்வே - கேரள அணிகள் மோதுகின்றன.
அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆடவர் இறுதிச்சுற்றில் இந்திய இரயில்வே - கேரள அணிகள் மோதுகின்றன.
முன்னதாக பகல் 12 மணிக்கு நடைபெறும் ஆடவர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் தமிழகமும், பஞ்சாபும் மோதுகின்றன.
பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் மகளிர் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஆந்திரமும், மகாராஷ்டிரமும் மோதுகின்றன.