உலக கோப்பை கபடி போட்டியில் பரபரப்பான இறுதி போட்டியி இந்தியா ஈரானை 38-29 என்ற கணக்கில் 9 பாயிண்டுகள் அதிகம் பெற்று வென்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆமதாபாத்தில் நடந்த உலகக்கோப்பை கபடிப் போட்டியில் ஈரான் அணியை சாய்த்து ஹாட்ரிக் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது இந்திய அணி.

3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்து வநத்து. 12 அணிகள் பங்கேற்ற இந்த கபடி திருவிழாவில் நேற்றிரவு நடந்த இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், ஈரான் அணியும் மோதின.

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஈரான் வீரர்கள், இந்திய வீரர்களை திணறடித்தனர். ரைடு சென்று புள்ளி எடுப்பதிலும், எதிரணி வீரர்களை மடக்கி பிடிப்பதிலும் கச்சிதமாக செயல்பட்ட ஈரான் வீரர்கள் புள்ளிகளை எளிதாகப் பெற்றனர். முதல் பாதியில் ஈரான் அணி 18-13 என்று முன்னிலை பெற்றிருந்தது.

ஆனால், 2-ம் பாதியில் இந்திய கேப்டன் அனுப், தாக்கூர், மஞ்சிப்சில்லர், பிரதீப் நர்வால் ஆகியோர் சிறப்பாகச் செயல்பட்டு புள்ளிகளை கவர்ந்தனர்.

வாழ்வா சாவா என்ற கட்டத்தில் 48-வது நிமிடத்தில் இரு அணிகளும் 20-20 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர். அதன்பின் இந்திய வீரர்களின் எழுச்சி மிகுந்த ரெய்டில் ஈரான் வீரர்கள் திணறினர். அடுத்த 11 நிமிடங்களில் இந்திய வீரர் தாக்கூர் சிறப்பாகச் செயல்பட்டு ஈரான் அணியை ஆல்அவுட் செய்தார். இதனால் இந்திய அணி 24-21 என்று முன்னிலை பெற்றது.

ஆனால் அதன்பின் ஈரான் அணி எவ்வளவோ முயன்றும் இந்தி அணியின் ஆட்டத்தின் முன் மீண்டுவர முடியவில்லை. முடிவில் இந்திய அணி 38-29 என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

இதற்கமுன் கடந்த 2004 மற்றும் 2007ம் ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் ஈரான் அணியை இந்தியா சாய்த்து கோப்பையை ருசித்திருந்தது குறிப்பிடதக்கது.