india won by innings in second test match

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா-இலங்கை இடையே கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. நாக்பூரில் கடந்த 24-ம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணியில், முரளி விஜய், புஜாரா, ரோஹித் சர்மா ஆகியோர் அபாரமாக ஆடி சதமடித்தனர். கேப்டன் கோலி, இரட்டை சதமடித்து அசத்தினார். இவர்களின் அபார பேட்டிங்கால், இந்திய அணி, முதல் இன்னிங்சில் 610 ரன்களைக் குவித்தது.

405 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறினர். அந்த அணியின் கேப்டன் சண்டிமால் மட்டும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் கடந்தார். எனினும் உமேஷ் யாதவின் வேகத்தில் வீழ்ந்தார் சண்டிமால். இதைத்தொடர்ந்து இலங்கை அணி, 166 ரன்களுக்கே இரண்டாவது இன்னிங்சில் ஆல் அவுட்டானது. 

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், குறைந்த போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதையடுத்து இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மூன்று டெஸ்ட் போட்டிகள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 2-ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது.