வாயிலயே வடை சுட்ட ஆஃப்கானிஸ்தான்.. வச்சு செஞ்ச இந்தியா!! தவான் அதிரடி சதம்
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் - முரளி விஜய் இணை, சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளது. ஷிகர் தவான் சதமடித்து களத்தில் உள்ளார்.
அண்மையில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, அதன் முதல் போட்டியில் இந்திய அணியுடன் ஆடிவருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்துவருகிறது.
ஐபிஎல்லில் கவனத்தை ஈர்த்த ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான் ஆகிய ஸ்பின்னர்கள் ஆஃப்கானிஸ்தான் அணியில் உள்ளதால், இந்த போட்டி ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. கத்துக்குட்டியான ஆஃப்கானிஸ்தான், ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான் ஆகிய தரமான ஸ்பின்னர்களை கொண்டிருப்பதால், டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த அணியான இந்தியாவை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தயாரானது.
போட்டிக்கு முன்னதாக ரஷீத் கான் மற்றும் முஜீபுர் ரஹ்மான் ஆகியோரை பெற்றிருப்பதால், அந்த அணியின் கேப்டன் மிகுந்த மன தைரியத்தில் பேசினார். இந்திய அணியை விட தங்கள் அணியில் சிறந்த ஸ்பின்னர்கள் இருப்பதாக கூறினார். இன்னும் டெஸ்ட் போட்டியே ஆடாத நிலையில், ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டனின் தற்பெருமை மிக்க பேச்சு ரசிப்பதாக அமையவில்லை.
இந்நிலையில், போட்டி காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் களமிறங்கினர். முரளி விஜய் நிதானமாக ஆட, ஷிகர் தவான் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார்.
ரஷீத் கானைத்தான் ஆஃப்கானிஸ்தான் அணி பெரிதும் நம்பியிருந்தது. இந்நிலையில், ரஷீத் கான் பவுலிங்கை அடித்து நொறுக்கினார் தவான். 7 ஓவர்கள் வீசிய ரஷீத் கான் 51 ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.
தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ஷிகர் தவான், மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாகவே சதமடித்து விட்டார். 91 பந்துகளுக்கு 104 ரன்கள் குவித்துள்ளார் தவான். முரளி விஜய், 72 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து நிதானமாக ஆடிவருகிறார்.
மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 158 ரன்கள் எடுத்துள்ளது.