தைவேன் வீரரை வீழ்த்தி இந்தியாவின் விஷ்ணு அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்…
ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் தைவேன் வீரரான டி சென்னை வீழ்த்தி இந்தியாவின் விஷ்ணு வர்தன் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சீனாவின் ஜினான் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தைபேவின் டி சென்னுடன் மோதினார் இந்தியாவின் விஷ்ணு வர்தன்.
இதில், 7-6(3), 6-3 என்ற செட் கணக்கில் டி சென்னை வீழ்த்தி வெற்றிப் பெற்றார் விஷ்ணு வர்தன்.
அவர் தனது 2-வது சுற்றில் சீனாவின் வைல்டு கார்டு சுற்று வீரரான ஜிஜென் ஜாங்கை சந்திக்கிறார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி - விஷ்ணு வர்தன் இணை, சாகேத் மைனேனி - பிரசாந்த் இணையை 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றான காலிறுதிக்கு முன்னேறியது.
இதனிடையே, ஒற்றியயர் மற்றும் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற இந்தியா வீரர்கள் தங்களது முதல் சுற்றிலேயே தோல்வியைத் தழுவினர் என்பது வேதனைக்குரியது.
இந்தியாவின் மைனேனி, ரஷியாவின் எவ்ஜெனி டான்ஸ்காயிடம் 2-6, 2-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.
இந்தியாவின் சசிகுமார் முகுந்த் 3-6, 2-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அலெக்ஸாண்டர் குட்ரியாத்செவிடம் வீழ்ந்தார்.
இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி 2-6, 2-6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோ சோடாவிடம் வீழ்ந்தார்.
இந்தியாவின் சித்தார்த் ராவத் 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தென் கொரியாவின் சூன் வூ குவோனிடம் வீழ்ந்தார்.
அதேபோன்று ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சித்தார்த் ராவத் - சசிகுமார் முகுந்த் ஜோடி 1-6, 2-6 என்ற செட் கணக்கில் செர்பியாவின் மியோமிர் கெச்மானோவிச் - ஸ்பெயினின் மேரியோ மார்டினெஸ் இணையிடம் வீழ்ந்தது.