ஒரே ஓய்வறையில் இந்தியா-பாகிஸ்தான் வீரர்கள்..!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உலக லெவன் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒரே ஓய்வறையை பகிர்ந்துகொள்ள இருப்பது சிறப்பான நிகழ்வு என ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆண்டி பிளவர் தெரிவித்துள்ளார்.
கரீபியன் தீவுகளில் கடந்த ஆண்டு வீசிய கடும் சூறாவளியால், பெரும் சேதம் ஏற்பட்டது. அதை ஈடுகட்டுவதற்காக நிதி திரட்டும் வகையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உலக லெவன் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
இந்த உலக லெவன் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த அணியில், இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் ஆடுகிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலக லெவன் அணி:
அப்ரிடி (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், தமிம் இக்பால், தினேஷ் கார்த்திக், ரஷித் கான், சந்தீப் லாமிச்சேன், மெக்ளேனகன், சோயிப் மாலிக், திசாரா பெரேரா, லூக் ரோஞ்சி, அடில் ரஷித், முகமது ஷமி.
இந்த போட்டி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரர் ஆண்டி பிளவர், உலக லெவன் அணிக்காக விளையாடுவது மிகவும் சிறப்பான விஷயம். குறிப்பாக எல்லா அணி வீரர்களும் ஒரே இடத்தில் இருக்கும் போது, பல அனுபவங்கள் கிடைக்கும். இந்த முறை மிகவும் அரிய நிகழ்வாக இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் ஒரே ஓய்வறையை பகிர்ந்துகொள்ள இருப்பது சிறப்பான விஷயம் என அவர் தெரிவித்துள்ளார்.