பல்கேரிய ஓபனில் இரண்டாம் நிலை வீரரை வீழ்த்தி வாகைச் சூடினார் இந்தியாவின் லக்ஷயா சென்…
பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென் வாகைச் சூடினார்.
பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் போட்டி பல்கேரிய தலைநகர் சோபியாவில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் மற்றும் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த குரோஷியாவின் ஸ்வோனிமிர் துர்கின்ஜாக் மோதினர்.
இதில், 18-21, 21-12, 21-17 என்ற செட் கணக்கில் ஸ்வோனிமிர் துர்கின்ஜாக்கை தோற்கடித்து சாம்பியன் வென்றார் லக்ஷ்யா.
வெற்றிக்கு பின்னர் இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளர் விமல்குமார், “லக்ஷயா சென்னுக்கு இது வியக்கத்தக்க சாதனையாகும். அவர் இப்போதும் ஜூனியர் வீரராகத்தான் இருக்கிறார். ஆனாலும் அவரால் பெரிய அளவிலான போட்டியில் வெல்ல முடிந்திருக்கிறது. இது நல்ல தொடக்கமாகும்.
பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் பீட்டர் காடேவிடம் பயிற்சி பெறுவதற்காக 5 இந்திய வீரர்களை அனுப்பினோம். அதில் லக்ஷயா சென்னும் ஒருவர். அவர் இப்போது பீட்டர் காடேவின் பயிற்சியால் பலனடைந்திருக்கிறார்.
இந்தத் தொடரின் முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த சாம் பார்சன்ஸை வீழ்த்தினார் லக்ஷயா சென். இதுதவிர இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய சீனியர் போட்டியில் இறுதிச் சுற்று வரை முன்னேறினார்.
அது பிரணாய் போன்ற முன்னணி வீரர்களை தோற்கடிக்கக்கூடிய நம்பிக்கையை லக்ஷயா சென்னுக்கு கொடுத்துள்ளது. லக்ஷயா சென் சரியான முறையில் பட்டை தீட்டப்பட்டால் அவருக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது” என்று பெருமையுடன் தெரிவித்தார்.