அகமதாபாத் மாஸ்டர்ஸ் அணியில் இந்தியாவின் ஹெ.எஸ்.பிரணாய், தைபேவின் தை ஸு யிங் இடம்பிடிப்பு...
ப்ரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியில் முதல்முறையாக அறிமுகமாகும் அகமதாபாத் மாஸ்டர்ஸ் அணியில் இந்தியாவின் ஹெ.எஸ்.பிரணாய், உலக தரவரிசையில் மகளிர் பிரிவில் முதலிடத்தில் இருக்கும் தைபேவின் தை ஸு யிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மூன்றாவது ப்ரீமியர் பாட்மிண்டன் லீக் போட்டியில் இம்மாதம் 23-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 14-ஆம் தேதி வரை குவாஹாட்டி, டெல்லி, லக்னௌ, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன.
இந்தாண்டு அறிமுக அணியாக அகமதாபாத் மாஸ்டர்ஸும், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணிகளும் களமிறங்கவுள்ளன. இந்த அணிகளுக்காக, உலகின் முன்னணி வீரர்கள் பலர் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் ஹெ.எஸ்.பிரணாய், ரூ.62 இலட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அடுத்தபடியாக அவாதே வாரியர்ஸ் அணிக்காக ஸ்ரீகாந்த் ரூ.56 இலட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்படடார்.
போட்டியில் பங்கேற்கவுள்ள பெங்களூரு மாஸ்டர்ஸ், சென்னை ஸ்மாஷர்ஸ், ஐதராபாத் ஹண்டர்ஸ், டெல்லி ஏசர்ஸ், மும்பை ராக்கெட்ஸ் ஆகிய இதர அணிகளிலும் முன்னணி வீரர், வீராங்கனைகள் ஏலம் மூலம் எடுக்கப்பட்டனர். ஏற்கெனவே அந்த அணியில் இருக்கும் வீரர்கள் தொடர்ந்து இந்த ஆண்டும் நீடிக்கின்றனர்.
இந்தியாவின் நட்சத்திர வீராங்கனைகளான பி.வி.சிந்து சென்னை ஸ்மாஷர்ஸ் அணியிலும், சாய்னா நெவால் அவாதே வாரியர்ஸ் அணியிலும் தொடர்ந்து நீடிக்கின்றனர்.