அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அதிரடி ஆட்டத்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய வீரர்கள்…
அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால், ரோஜர் ஃபெடரர், கரோலினா பிளிஸ்கோவா, மேடிசன் கீஸ் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரர் ஸ்பெயினின் ரஃபேல் நடால், உக்ரைனின் அலெக்ஸாண்டர் டோல்கோபோலோவை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் நடால் 6-2, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
நடால் தனது காலிறுதியில் ரஷியாவின் ஆன்ட்ரே ருபலேவை சந்திக்கிறார்.
மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜெர்மனியின் பிலிப் கோல்ஷ்ரைபருடன் எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் 6-4, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் ஃபெடரர் வெற்றிப் பெற்றார்.
ஃபெடரர் தனது காலிறுதியில், ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை சந்திக்கிறார்.
அதேபோன்று மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல் நிலை வீராங்கனையான செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தனது 4-வது சுற்றில் அமெரிக்காவின் ஜெனிஃபர் பிராடியை எதிர்கொண்டார்.
இதில், 6-1, 6-0 என்ற செட் கணக்கில் ஜெனிஃபர் பிராடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் கரோலினா.
கரோலினா காலிறுதியில் மற்றொரு அமெரிக்கரான கோகோ வான்டெவெக்கை சந்திக்கிறார்.
அதேபோல், அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன் மோதி 7-6(2), 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மேடிசன் கீஸ் காலிறுதியில் எஸ்டோனியாவின் கையா கானேபியை சந்திக்கிறார்.