சர்வதேச அளவில் சிறந்த வீரராக விரும்பினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடுங்கள் - இளம் வீரர்களுக்கு கோலி அட்வைஸ்...
சர்வதேச அளவில் சிறந்த வீரராக செயல்பட விரும்பினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடுங்கள் என்று இளம் வீரர்களுக்கு வீராட் கோலி அறிவுரை வழங்கினார்.
டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சந்திப்புக் கூட்டம் முதல் முறையாக ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
டெல்லி வீரரான விராட் கோலி மற்றும் சிறு வயது பயிற்சியாளர் பிஷன் சிங் பேடி பங்கேற்றனர். அப்போது பிஷன் சிங் பேசியது:
"சிறுவயதில் மைதானத்தில் கோலியின் சில நடவடிக்கைகளை நான் கண்டித்திருக்கிறேன். ஆனால், களத்தில் அவரை விட தீவிரமிக்க ஒரு இந்திய வீரரை நான் கண்டதில்லை" என்றார்.
இந்த கூட்டத்தில் வீராட் கோலி பேசியது:
"சர்வதேச அளவில் சிறந்த வீரராக செயல்பட விரும்பினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக விளையாட வேண்டும் என்று நம்புகிறேன். எனவே, அதில் சிறப்பாக செயல்படுமாறு இளம் வீரர்களை கேட்டுக் கொள்கிறேன்.
நான் 14 மற்றும் 16 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட்டில் விளையாடியபோது பிஷன் சிங் பேடி பயிற்சியாளராக இருந்தார். அவர் எங்களை அதிகம் பயிற்சி பெறச் செய்வார். தற்போது அது எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் டெல்லி அணி கேப்டன்களுடன், அந்த அணியின் கேப்டனாக இருந்த நானும் சேர்ந்து நிற்பது எனக்கான கெளரவமாகும்" என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்வின்போது, ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் உள்ள இரண்டு கேலரிகளுக்கு முன்னாள் வீரர்களான பிஷன் சிங் பேடி, மொஹிந்தர் சிங் அமர்நாத் ஆகியோரது பெயர் சூட்டப்பட்டது.