கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்..? அனில் கும்ப்ளே தலைமையில் முக்கிய முடிவு!! விதிகளை மீறும் வீரர்களுக்கு கடும் தண்டனை
டெஸ்ட் கிரிக்கெட்டில் டாஸ் போடும் முறையை தொடர்வது என கும்ப்ளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அந்தந்த நாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடரின் போது, பிட்ச் உள்ளிட்ட சாதக சூழல்களை போட்டி நடக்கும் நாடுகள் தங்களுக்கு சாதகமாக அமைத்து கொள்கின்றன. இதனால் போட்டிகளின் முடிவு ஒருதலைபட்சமாக அமைகிறது என ஐசிசி கருதுகிறது. அதனால் டாஸ் போடும் முறையை கைவிட ஐசிசி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
அடுத்த ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடக்க உள்ளது. இதற்கிடையே டாஸ் போடும் முறையை கைவிடுவது தொடர்பான தகவல்கள் பரவலாக எழுந்த நிலையில், மும்பையில் நடந்த ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் டாஸ் முறையை தொடர்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தலைமையில் நடந்த கூட்டத்தில், டெஸ்ட் போட்டிகளில் டாஸ் முறையை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது.
அதேநேரத்தில் ஆடுகளம் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும் ஐசிசி-யின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆடுகளம் தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீரர்கள் நடத்தை விதிமுறையை மீறினாலோ, பந்தை சேதப்படுத்துதல் போன்ற தவறான செயலில் ஈடுபட்டாலோ தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் போட்டி நடுவர்களுக்கு தண்டனை வழங்குவதில் கூடுதல் அதிகாரங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை கும்ப்ளே தலைமையிலான கமிட்டி ஐசிசியிடம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக ஐசிசி இறுதி முடிவை எடுக்கும்.