உலகக் கோப்பையில் விளையாடுவது உறுதி - காயம்பட்ட லிவர்பூல் வீரர் நம்பிக்கை...
உலகக் கோப்பையில் விளையாடுவேன் என்று சாம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிச் சுற்றில் காயமடைந்த லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரரும், எகிப்து நாட்டைச் சேர்ந்தவருமான முகமது சலா என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
லிவர்பூல் அணியில் விளையாடி வரும் முகமது சலா, நடப்பு சாம்பியன் லீக் சீசனில் 40-க்கு மேற்பட்ட கோல்களை அடித்து பிரபலமடைந்தார். இந்த நிலையில் சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி கீவ் நகரில் லிவர்பூல் அணிக்கும் - ரியல் மாட்ரிட் அணிக்கும் இடையே நடைபெற்றது.
அப்போது, தீவிரமாக விளையாடி சலா, ரியல் அணியின் கேப்டன் ரமோஸிடம் இருந்து பந்தை கடத்த முயன்றபோது தோளில் காயமடைந்தார். இதனையடுத்து உடனே களத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் அதிர்ச்சி அடைந்த லிவர்பூல் அணி பயிற்சியாளர் ஜுர்கன் கிளாப் எகிப்து அணிக்கு சலா விளையாட முடியுமா என்று சந்தேகம் எழுப்பினார். அவரால் இரண்டு மாதங்கள் விளையாட முடியாது என்ற தகவலும் ஒருபக்கம் பரவியது.
இந்த நிலையில் முகமது சலா தனது சுட்டுரையில், "ரசிகர்கள் ஆதரவும், அன்பும் எனக்கு மன உறுதியை தருகின்றன. உலகக் கோப்பையில் எகிப்து அணிக்கா விளையாடுவேன்" என்று தெரிவித்தார்.