இந்தியாவில் ஐந்து சிறந்த பாட்மிண்டன் ஜோடியையாவது உருவாக்க விரும்புகிறேன் என்றார் ஜுவாலா கட்டா…
இந்தியாவில் குறைந்தது ஐந்து சிறந்த பாட்மிண்டன் ஜோடியையாவது உருவாக்க விரும்புகிறேன் என்று மகளிர் இரட்டையர் பிரிவு பயிற்சியாளரான ஜுவாலா கட்டா கூறியுள்ளார்.
பாட்மிண்டன் வீராங்கனையான மகளிர் இரட்டையர் பிரிவு பயிற்சியாளரான ஜுவாலா கட்டா 2011 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் பலமுறை தேசிய இரட்டையர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது
ஜுவாலா கட்டாவை பயிற்சியாளராக சமீபத்தில் இந்திய பாட்மிண்டன் சங்கம் நியமித்தது அதுகுறித்து அவர் நேற்று கூறியது:
“இந்திய பாட்மிண்டனில் இரட்டையர் பிரிவை இன்னும் மேம்பட்ட ஒன்றாகக் காண விரும்புகிறேன். இரட்டையர் பிரிவுக்காகவே எப்போதும் குரல் கொடுக்கிறேன். அதுதொடர்பான நடவடிக்கையில் தற்போது இந்திய பாட்மிண்டன் சங்கம் என்னையும் சேர்த்துக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இந்திய பாட்மிண்டனில் ஒற்றையர் பிரிவினர் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். எனவே, இரட்டையர் பிரிவில் கவனம் செலுத்த வேண்டிய நேரமிது. இரட்டையர் பிரிவை பிரபலப்படுத்தவும், அதுகுறித்து மக்களும், ஊடகங்களும் அறியச் செய்யவும் விரும்புகிறேன்.
இரட்டையர் பிரிவிற்கு தற்போது தகுந்த ஆதரவு, பிரச்சாரம், விளம்பரதாரர்கள் போதிய அளவு இல்லை. எனவே, வளரும் பாட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் ஒற்றையர் பிரிவிலேயே அதிகம் கவனம் செலுத்துகின்றனர்.
இந்தியாவில் குறைந்தது ஐந்து சிறந்த பாட்மிண்டன் ஜோடியையாவது உருவாக்க விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.