சிறப்பான பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது இங்கிலாந்து - இந்தியாவின் புஜாரா புகழ்ச்சி...
இங்கிலாந்தின் யார்க்ஷயர் கிளப் அணிக்காக விளையாடுவது, அந்நாட்டு மண்ணில் இந்திய அணிக்காக விளையாடும்போது உதவும் என்று இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா தெரிவித்தார்.
இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதற்கு முன்பு, ஏப்ரலில் அந்நாட்டில் நடைபெறும் கிளப் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் நான் விளையாடவுள்ளேன். இது அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் தொடருக்கு என்னை தயார்படுத்திக் கொள்ள உதவும்.
அந்நாட்டு மைதானங்களில் விளையாடுவது வெளிநாட்டு வீரர்களுக்கு சவாலான காரியம் ஆகும். கிளப் அணிக்காக விளையாடும்போது, அங்குள்ள மைதானங்களின் தன்மையை என்னால் புரிந்துகொள்ள முடியும்.
நமது அணிக்காக விளையாடும்போது இது மிகவும் உதவி புரியும். வெளிநாடுகளில் விளையாடும்போது அதிக கணம் இல்லாத பேட்டையே பயன்படுத்தி விளையாடுவேன். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்கள் போலவே இங்கிலாந்திலும் சவால் நமக்கு காத்திருக்கிறது.
எந்த நாடுகளைச் சேர்ந்த அணியும் வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் சோபித்தது கிடையாது. ஆஸ்திரேலியாவில் ஆஷஸ் தொடரை இங்கிலாந்து பரிகொடுத்தை நினைவுபடுத்தி கொள்ளலாம்.
நம்மை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்கிறோம் என்றாலும் இங்கிலாந்து பந்துவீச்சாளரும், ஆல்-ரவுண்டருமான மொயீன் அலி போன்ற வீரர்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அந்த அணி சிறப்பான பந்துவீச்சாளர்களைக் கொண்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.