ஐபிஎல் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கெய்ல்
ஐபிஎல், உலகின் சிறந்த கிரிக்கெட் தொடர் என கிறிஸ் கெய்ல் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல்லில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் கிறிஸ் கெய்ல். ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள், அதிகபட்ச ஸ்கோர் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான கெய்லை, ஐபிஎல் 11வது சீசனுக்கான ஏலத்தில் எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை.
அவர் ஆடிவந்த பெங்களூரு அணி, அவரை தக்கவைக்க விரும்பவில்லை. மற்ற அணிகளும் அவரை அடிப்படை விலைக்கு கூட எடுக்க முன்வரவில்லை. இரண்டாவது ஏலத்திலும் எடுக்கப்படவில்லை. மூன்றாவது ஏலத்தில் சேவாக் ஆலோசகராக உள்ள பஞ்சாப் அணி அவரை எடுத்தது.
ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்த கெய்ல், பெங்களூரு அணி தன்னை தக்கவைப்பதாக கூறி ஏமாற்றிவிட்டதாக வெளிப்படையாகவே தெரிவித்தார். எனினும் இந்த சீசனில் தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய கெய்ல், இரண்டாவது பாதியில் சரியாக ஆடவில்லை.
பஞ்சாப் அணியும் பிளே ஆஃபிற்கு தகுதி பெறவில்லை. அண்மையில் வழங்கப்பட்ட சியட் விருது வழங்கும் விழாவில், சிறந்த பாப்புலர் தேர்வாக கெய்ல் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த கெய்ல், ஐபிஎல் தொடர்பான பல்வேறு கருத்துகளை பகிர்ந்துகொண்டார். அந்த பேட்டியில், என்னுடைய ஐபிஎல் வரலாற்றை திரும்பி பார்த்தால், ஐபிஎல் தொடரில் நான் எவ்வளவோ சிறப்பாக ஆடியிருக்கிறேன். இப்போதும் கூட சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறேன். இந்தியாவில் ஆடுவதை மிகவும் நேசிக்கிறேன்.
மீண்டும் ஐபிஎல்லில் ஆடியது சிறப்பானது. உலகின் சிறந்த கிரிக்கெட் தொடர் ஐபிஎல். புதிய அணிக்காக(பஞ்சாப்) இந்த முறை ஆடினேன். பஞ்சாப் அணியின் வரவேற்பும் ஆதரவும் சிறப்பாக இருந்தது. இந்த சீசனை நாங்கள் சிறப்பாகவே தொடங்கினோம். ஆனால் இரண்டாம் பாதி சிறப்பாக அமையவில்லை என கெய்ல் தெரிவித்தார்.