இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாறாக, பேட்ஸ்மேன் கெளதம் கம்பீர் நீக்கப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய புவனேஷ்வர் குமார், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 6 வாரங்களாக ஓய்வில் இருந்தார். காயத்திலிருந்து மீண்டதை அடுத்து, விதிமுறைப் படி ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய நிலையில் தற்போது தேசிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம், சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பட்டியலில், 4-ஆவது வேகப்பந்து வீச்சாளராக புவனேஷ்வர் குமார் இணைந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படாததை அடுத்து, கெளதம் கம்பீர் நீக்கப்பட்டுள்ளார். தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த அணியே, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், சேத்தேஷ்வர் புஜாரா, கருண் நாயர், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெய்ந்த் யாதவ், அமித் மிஸ்ரா, முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், ஹர்திக் பாண்டியா.
