இலங்கை பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் அபாரமாக ஆடினர் – தோல்விக்குப் பிறகு கோலி பேச்சு…
இலங்கை பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் அபாரமாக ஆடினர். அதனால் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
இலண்டனில் வியாழக்கிழமை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் 8-வது ஆட்டத்தில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது இலங்கை.
இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 321 ஓட்டங்கள் குவித்தது.
இந்தியா எளிதாக வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆடிய இலங்கை அணியில் குணதிலகா 76 ஓட்டங்கள், குஷல் மென்டிஸ் 89 ஓட்டங்கள் குவிக்க, அந்த அணி 48.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்கள் எடுத்து தனது அபாரா ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கள் அணியின் முன்னேற்றத்டை காட்டியது.
தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கேப்டன் கோலி கூறியது:
இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு கட்டத்தில் நாங்கள் போதிய அளவு ஓட்டங்கள் குவித்துவிட்டதாக நினைத்தேன். எங்கள் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன்.
ஆனால் இலங்கை பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் அபாரமாக ஆடினர். அதனால் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். அதேநேரத்தில் நாங்கள், எதிரணியால் வீழ்த்த முடியாத அணியல்ல.
அடுத்த ஆட்டம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. தற்போதைய நிலையில் ஒவ்வொரு ஆட்டமும் காலிறுதியைப் போன்று ஆகிவிட்டது. எங்களுடைய "பி' பிரிவை எடுத்துக் கொண்டால், எல்லா அணிகளுமே தலா இரண்டு புள்ளிகளுடன் இருக்கின்றன.
எனவே எல்லா அணிகளுமே தங்களின் கடைசி ஆட்டத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அடுத்த ஆட்டங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன” என்று கூறினார்.