Dhoni says Ill keep my eyes shut - he is so confident that he will go

பேட்டிங்கின்போது தோனி '2 ரன்கள்' என்று கூறிவிட்டால், கண்ணை மூடிக்கொண்டு ரன்னிங் செல்வேன் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில், “எனக்கும், தோனிக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக பலர் புனைவுக் கதை எழுதுகின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால், நானோ, தோனியோ அவற்றில் கவனம் செலுத்துவதே இல்லை. 

எங்களை ஒன்றாகப் பார்க்கும்போது 'உங்களது நட்பில் பிளவு இல்லையா?' என ஆச்சரியமடைகின்றனர். நாங்கள் எங்களுக்குள்ளாக சிரித்துக் கொண்டு, 'அப்படி ஏதும் இல்லை' என்று கூறுகிறோம். கடந்த ஆண்டுகளில் எங்களது நட்பு நன்றாக உறுதியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யு ஹைடன் முன்னர் ஒருமுறை தோனியை 7 வயது குழந்தையுடன் ஒப்பிட்டுக் கூறினார். அது சரியே. தோனி ஒரு குழந்தை போன்ற தன்மை உடையவர். எதிலும் அதிக ஆர்வம் கொண்ட அவர், தன்னை ஆச்சரியப்படுத்தும் ஒன்றை எப்போதுமே தேடுபவர். 

ஆட்டத்தைப் பொருத்த வரையில் எனது உள்ளுணர்வின் படி நடந்துகொள்வேன். 
ஆனால், தோனியிடம் கேட்கும் பரிந்துரைகளில் 10-இல் 8 அல்லது 9 மிகச் சரியானதாகவே இருக்கும். கேப்டன்ஷிப்பை பொறுப்பேற்பதிலும் எல்லாம் சுமூகமாகவே இருந்தது. 
அணி வீரர்கள் எந்தவொரு மாற்றத்தையும் உணரவில்லை. தோனி அவ்வாறு அதனை சுமுகமானதாகச் செய்திருந்தார்.

எனது தொடக்க கால கேப்டன்ஷிப்பில் அவர் என்னுடன் இருந்தது எனக்கான அதிர்ஷ்டம். தோனிக்கும், எனக்குமான புரிதல் சிறந்த ஒன்று. களத்தில் பேட்டிங் செய்யும்போது அவர் '2 ரன்கள்' என்று கூறிவிட்டால், கண்ணை மூடிக்கொண்டு ரன்னிங் செல்வேன். ஏனெனில், அவரது கணிப்பு சரியானதாக இருக்கும்” என்று கூறி நெகிழச் செய்தார் கோலி.