dhoni opinion about defeat against mumbai

தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டே இருந்தால், எந்த விஷயத்தில் அணி இன்னும் மேம்பட வேண்டும் என்பதை அறிய முடியாமல் போய்விடும். அந்த வகையில் இந்த தோல்வி, அணியின் மேம்பாட்டுக்கு உதவும் என சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தொடர் வெற்றியை சந்தித்துவந்த சென்னை அணியும் தொடர் தோல்விகளை சந்தித்துவந்த மும்பை அணியும் நேற்று மோதின. வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய மும்பை அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பெற்றது. இதன்மூலம் தொடர் தோல்விக்கு மும்பை அணி முற்றுப்புள்ளி வைத்தது.

போட்டிக்கு பின் தோல்வி குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி, எந்த இடத்தில் தவறு நடக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள இந்த தோல்வி முக்கியம் என கருதுகிறேன். இதுவரை நடந்த போட்டிகளில் பெரும்பாலும் அணியின் வெற்றிக்கு தனிப்பட்ட நபரின் திறமையை சார்ந்தே இருக்க வேண்டியிருக்கிறது. நடு ஓவர்களில் மும்பை அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினர். 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். எங்கள் அணி பவுலர்கள், எந்த மாதிரியான பந்துவீச வேண்டும் என்ற தேர்வில் இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது.

தோல்வி அடக்கத்தை கொடுக்கும். இந்த தோல்வி, பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களை சோதிக்க உதவும். மேலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று கொண்டேயிருந்தால், அணியாக எந்த இடத்தில் மேம்பட வேண்டியிருக்கிறது என்பதை அறிய முடியாது. அந்த வகையில், இந்த தோல்வி தேவையான ஒன்றுதான். இது ஒரு கடினமான போட்டிதான். எளிதாக 14 அல்லது 15வது ஓவரிலேயே நாங்கள் தோல்வி அடைந்துவிடவில்லை. கடைசி ஓவர் வரை கொண்டுவந்துள்ளோம் என தோனி தெரிவித்தார்.