வயசானாலும் இப்பவும் இளம் வீரர்களுக்கு டஃப் கொடுப்பவர் தோனி மட்டுமே - ரவி சாஸ்திரி புகழாராம்...
தனது 36-வது வயதிலும் இளம் வீரர்களுக்கு சவால் அளிக்கக் கூடியவர் எம்.எஸ்.தோனி என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழ்ந்துள்ளார்.
இலங்கை தொடருக்கு முன்பாக தோனியின் பேட்டிங் திறன் குறித்து முன்னாள் வீரர்கள் உள்பட பல தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்தன. அந்த சமயத்தில் ரவி சாஸ்திரி உள்ளிட்ட பலர் தோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சமீபத்தில் நிறைவடைந்த இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் தோனி பெரும்பாலான சூழ்நிலைகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.
இதுகுறித்து தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "நாங்கள் முட்டாள்கள் இல்லை. இந்திய அணியின் விளையாட்டை கடந்த 30 - 40 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்.
விராட் கோலி கடந்த 10 ஆண்டுகளாக அணியின் ஒரு பகுதியாக இருக்கிறார். எனவே எங்களுக்குத் தெரியும் தோனி இந்த வயதிலும் தன்னைவிட 10 வயது குறைவான வீரர்களுக்கு சவால் அளித்து அவர்களை வெல்ல முடியும்.
தோனியை பற்றிப் பேசுபவர்கள் தாங்கள் விளையாடிய காலங்களை மறந்துவிட்டனர். அவர்கள் தங்களது 36 வயதில் எப்படி இருந்தார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்களால் வேகமாக 2 ரன்கள் ஓட முடியுமா? அவர்கள் 2 ரன்கள் ஓடுவதற்குள் தோனி 3 ரன்கள் ஓடியிருப்பார்.
இன்று வரையில் அவருக்கு மாற்றாக இருக்கக் கூடிய ஒரு விக்கெட் கீப்பர் இந்திய அணியில் மட்டுமல்ல, உலக அளவிலேயே இல்லை. அவரிடம் இருக்கும் சில தகுதிகளை வேறு எந்த வீரர்களிடம் காண இயலாது" என்று ரவி சாஸ்திரி புகழ்ந்து கூறினார்.