dhoni gave up for ambati rayudu
ராயுடு சதமடிப்பதற்காக தோனி விட்டுக்கொடுத்த நிகழ்வு, தோனி மீதான ரசிகர்களின் மதிப்பை அதிகப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 46வது லீக் போட்டியில் சென்னை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது.
180 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் ராயுடுவும் வாட்சனும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதிரடியாக ஆடி சதமடித்த ராயுடு, கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து சென்னை அணியை வெற்றியடைய செய்தார். ஆட்டநாயகனாகவும் ராயுடு தேர்வானார்.
இந்த போட்டியில் 62 பந்துகளுக்கு ராயுடு சதமடித்தார். ராயுடு சதமடிப்பதற்காக தோனி விட்டுக்கொடுத்தார். வெற்றிக்கு 8 ரன்கள் தேவை என்ற நிலையில், 19வது ஓவரை எதிர்கொண்ட ராயுடு, இரண்டாவது பந்தில் சிங்கிள் தட்டி 99 ரன்களை எட்டினார். இன்னும் வெற்றிக்கு தேவை 7 ரன்கள் மட்டுமே. இந்த நிலையில், மூன்றாவது பந்தை தோனி பவுண்டரி அடித்தார். இன்னும் வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவை. தோனி நினைத்திருந்தால் பவுண்டரியோ சிக்ஸரோ அடித்திருக்க முடியும். ஆனால், 99 ரன்களில் இருக்கும் ராயுடு சதமடிக்க வேண்டும் என்பதற்காக நான்காவது பந்தில் சிங்கிள் தட்டி கொடுத்தார்.
ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுத்து ராயுடு சதமடித்தார். கடைசி பந்தில் தோனி ஒரு ரன் எடுக்க, சென்னை அணியும் வெற்றி பெற்றுவிட்டது; ராயுடுவும் சதமடித்துவிட்டார். ராயுடு சதமடிக்க வேண்டும் என்பதற்காக பெருந்தன்மையுடன் சிங்கிள் தட்டி கொடுத்த தோனியின் செயல், ரசிகர்களிடையே தோனி மீதான மதிப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
