பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் தோனி செய்த காரியம்!! கடைசி லீக் போட்டியில் ஒரு பேட்ஸ்மேனை இனம் கண்ட தல
ஐபிஎல் 11வது சீசன் லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. முதல் பிளே ஆஃப் போட்டி நாளை நடைபெறுகிறது. ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுள்ளன.
கடைசி லீக் போட்டி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே புனே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தால், ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி பிளே ஆஃபிற்கு தகுதி பெறலாம் என்ற கட்டாயத்தில் பஞ்சாப் அணி, சென்னை அணியை எதிர்கொண்டது. சென்னை அணி ஏற்கனவே பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றுவிட்டதால், வெற்றி தோல்வியால் சென்னைக்கு பாதிப்பு இல்லை.
அதனால் இந்த போட்டியில் தோனி, பல சோதனை முயற்சிகளை செய்தார். டாஸ் வென்ற தோனி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ராகுலை தொடக்கத்திலேயே நிகிடி வீழ்த்திவிட்டார். கெய்ல், ஃப்ன்ச், ராகுல் ஆகியோர் முதல் நான்கு ஓவர்களுக்கு உள்ளாகவே அவுட்டாகிவிட்டனர். கருண் நாயரின் அரைசதத்தால் பஞ்சாப் அணி மரியாதையான ஸ்கோரை எட்டியது. 19.4 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் எடுத்தது.
154 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் அம்பாதி ராயுடு,டுபிளெசிஸ், பில்லிங்ஸ் ஆகியோர் முதல் 5 ஓவருக்கு உள்ளாகவே அவுட்டாகிவிட்டனர். சாம் பில்லிங்ஸ் அவுட்டானவுடன் தோனி, பிராவோ அல்லது ஜடேஜா மூவரில் ஒருவர்தான் களமிறங்குவர் என்றுதான் அனைவரின் எதிர்பார்ப்பும் இருந்திருக்கும். ஆனால், ஹர்பஜன் சிங்கை களமிறக்கிவிட்டார் தோனி. பஞ்சாப் அணி தொடக்க ஓவர்களை சிறப்பாக வீசினர். தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை இழந்ததால், மற்றொரு பேட்ஸ்மேனையும் இழந்துவிடாமல் இருக்கும் வகையிலும் ஹர்பஜன் சிங்கும் அடித்து ஆடக்கூடியவர் என்ற முறையிலும் அவரை களமிறக்கினார் தோனி.
ஹர்பஜன் சிங் பேட்டிங் ஆடக்கூடியவர் தான். கடைசி நேரங்களில் 20 முதல் 30 ரன்கள் வெற்றிக்கு தேவை என்றால், அதை அடித்து அணியை வெற்றி பெற செய்யக்கூடிய அளவிற்கு பேட்டிங் ஆடக்கூடியவர். ஆனால், அவருக்கு இந்த தொடரில் பேட்டிங் வாய்ப்பு பெரும்பாலும் கிடைக்காமல் இருந்தது. அதனால், ஹர்பஜன் சிங்கை 5ம் வரிசையில் களமிறக்கிவிட்டார். அவரும் தன் மீதான நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக வீணடிக்காமல் 19 ரன்களை எடுத்து அவுட்டானார்.
அதன்பிறகாவது தோனி அல்லது பிராவோ இறங்குவார்கள் என்றால், அதுவும் கிடையாது. தீபக் சாஹரை களமிறக்கினார் தோனி. தன்னை இருத்திக்கொண்டு, சாஹரை களமிறக்கிவிட்டார் தோனி. சாஹர், 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 20 பந்துகளில் 39 ரன்களை அடித்தார். இந்த 39 ரன்கள் வெற்றிக்கு மிக முக்கியமானவை.
பிறகு ரெய்னாவும் தோனியும் இணைந்து அடித்து இலக்கை எட்டி வெற்றி பெற்றனர். பஞ்சாப்பும் தொடரை விட்டு வெளியேறியது. இந்த போட்டியை, சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் போட்டியாக தோனி பயன்படுத்தி கொண்டார்.
இந்த சோதனையின் மூலம் தீபக் சாஹர் என்ற பவுலருக்குள் ஒரு பேட்ஸ்மேனும் இருப்பதை தோனி இனம் கண்டுவிட்டார். இனி தீபக் சாஹரை தேவையான இடத்தில் சரியாக தோனி பயன்படுத்துவார்.