desire to host the U-20 World Cup football tournament in India - AIFF

இருபது வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்த ஆர்வத்துடன் இருப்பதாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் (ஏஐஎஃப்எஃப்) தெரிவித்துள்ளது.

2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியை (யு-20) நடத்த அகில இந்திய கால்பந்து சம்மேளனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பிரஃபுல் படேல் கூறியது:

“20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியையும் நடத்துவதன் மூலம் இந்தியாவில் கால்பந்து போட்டிக்கான ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புகிறோம்.

20 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டி இந்த ஆண்டு, ஆசிய நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில் நடைபெற்ற போதிலும், அடுத்த சீசனை இந்தியாவில் நடத்துவது தொடர்பாக ஃபிஃபாவுடன் கலந்தாலோசிக்க ஆர்வத்துடன் உள்ளோம். அதுகுறித்து, ஃபிஃபா போட்டிகளுக்கான குழுவிடம் தெரிவித்துள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இந்தியாவின் ஆறு நகரங்களில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது.