CSK VS RCB| IPL 2022: என்னத்தச் சொல்றது! ஓபனிங்கெல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு.: தோல்வி குறித்து தோனி குமுறல்
CSK VS RCB:IPL 2022: ms dhoni: ஆர்சிபி அணிக்கு எதிராக நன்றாகத்தான் தொடங்கினோம். ஆனால் விக்கெட்டுகளுக்கு இடையே பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடவில்லை. பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர் என்று சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிராக நன்றாகத்தான் தொடங்கினோம். ஆனால் விக்கெட்டுகளுக்கு இடையே பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடவில்லை. பேட்ஸ்மேன்கள் சொதப்பிவிட்டனர் என்று சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 13 ரன்களில் தோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 12 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கேயின் நிலைமையைப் பார்த்தால் இந்த ஆண்டு சீசனில், ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது கூட கடினம்தான். முன்னாள் சாம்பியன்கள் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணியினர் இந்த ஆண்டு லீக் சுற்றோடு வெளியேற வேண்டியதிருக்கும்.
சிஎஸ்கே அணி கெய்க்வாட், கான்வே கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 54 ரன்கள் சேர்த்தனர். அதன்பின் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. குறிப்பாக அடுத்த 55 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. 109 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த சிஎஸ்கே அணி, அடுத்த 40 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
தொடக்க ஆட்டக்காரர் கான்வே(56) நடுவரிசை ஆட்டக்காரர் மொயின் அலி(34) தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் நல்லதொரு இன்னிங்ஸை ஆடவில்லை. குறிப்பாக தோனி(2) ஜடேஜா(3), ராயுடு(10), உத்தப்பா(10) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து தோல்விக்குக் காரணமாகினர்.
ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல். பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு துணையாகினார். குறிப்பாக அம்பதி ராயுடு, உத்தப்பா ஆகிய இரு பெரிய விக்கெட்டுகள மேக்ஸ்வெல் சாய்த்தார்.
தவிர ஹர்சல் படேல் அருமையாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தார். ஜடேஜா, மொயின்அலி, பிரிட்டோரியஸ் ஆகிய பேட்ஸ்மேன்களை படேல் வெளியேற்றி வெற்றியை உறுதி செய்தார்.
இந்தப் போட்டியில் தோல்விக்குப்பின் சிஎஸ்கே கேப்டன் தோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஆர்சிபி அணியை 170 ரன்களில் சருட்டிவிட்டோம். ஆனால், எங்கள் பேட்டிங் சரியில்லாததால் தோல்வி அடைந்தோம். குறிப்பாக சேஸிங் செய்யும்போது நான் என்ன நினைக்கிறேன் என்றால், எவ்வளவு ரன்கள் தேவை என்பது பேட்ஸ்மேனுக்குத் தெரியும், பந்துவீச்சாளர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதும் தெரியும். அந்த நேரத்தில் உங்கள் மனதைக் கட்டுப்படுத்தி, வெறும் ஷாட்களை மட்டும் ஆடாமல், சூழலுக்கு என்ன தேவை, என்ன மாதிரியான ரன் தேவை என்பதை உணர்ந்து பேட்செய்ய வேண்டும்.
பேட்ஸ்மேன்கள் இன்னும் சற்று சிறப்பாக ஆடியிருந்தால், கடைசி சில ஓவர்களில் அதிகமான ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டிருக்காது. சிறப்பாகத் தொடங்கினோ், விக்கெட்டுகள் கைவசம் இருந்தன, ஆடுகளமும் நன்றாகத்தான் இருந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை கோட்டைவிட்டதுதான் தோல்விக்கு காரணம்.
இதுபோன்ற விஷயங்களில் கவனமாக இருந்தால், சேஸிங் என்பது திட்டமிடலைவிடவும் முதலில் பேட் செய்வது உள்ளூணர்வைவிட அதிகம். நடுவரிசையில் பேட்டிங் செய்யும் பேட்ஸ்மேன்கள், இதுபோன்ற விஷயங்களை சிந்திக்க வேண்டும். என்ன தவறு நடக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். எவ்வளவு புள்ளிகளில் இருக்கிறோம் என்ற விஷயம் எளிதாக கவனத்தை சிதறடித்துவிடும். புள்ளிப்பட்டியலில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதைவிட முக்கியமானது. அதை நீங்கள் கவனித்துக்கொண்டால் புள்ளிப்பட்டியல் தன்னைத்தானே கவனித்துக்கொள்ளும்
இவ்வாறு தோனி தெரிவித்தார்