csk vs mi: ipl 2022: ms dhoni: 'அவரோட இடத்தை நிரப்புறது கஷ்டம்ங்க'…! மனம் திறந்துபேசிய தோனி
csk vs mi: ipl 2022: ms dhoni: சிஎஸ்கே அணியில் அவருடைய இடம் தனிப்பட்டது. அவரின் இடத்தை மற்றொரு வீரரால் நிரப்புவது கடினமானது என்று ரவிந்திர ஜடேஜாவைப் பற்றி மிகவும் உருக்கமாக கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்தார்
சிஎஸ்கே அணியில் அவருடைய இடம் தனிப்பட்டது. அவரின் இடத்தை மற்றொரு வீரரால் நிரப்புவது கடினமானது என்று ரவிந்திர ஜடேஜாவைப் பற்றி மிகவும் உருக்கமாக கேப்டன் எம்எஸ் தோனி தெரிவித்தார்
ஐபிஎல் டி20 தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சிஎஸ்கே அணி செல்வது சுவற்றின் மீது நிற்கும் பூனை கதியாகியிருக்கிறது. சிஎஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வேண்டுமென்றால் அடுத்துவரும் அனைத்துப் போட்டிகளில் வெல்ல வேண்டும், அதுமட்டுமல்லாமல் மற்ற அணிகள் தோற்க வேண்டும். இந்தக் கணக்கு வந்தால்தான் சிஎஸ்கே ப்ளேஆஃப் சுற்றுக்குள் செல்லும். ஆனால், இது நடப்பது சாத்தியமில்லாதது.
மும்பை வான்ஹடே மைதானத்தில நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 98 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 14.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்த ஆட்டதுத்துக்கு முந்தைய நாள் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்ரவுண்டருமான ரவிந்திர ஜடேஜா காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடமாட்டார் என்று சிஎஸ்கே அணிதரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், ஜடேஜாவையும் சிஎஸ்கே அணி நிர்வாகம் இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்தது ஏதேனும் பிரச்சினையா என்ற சந்தேகத்தை கிளப்பியது.
ஜடேஜாவுக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையே மனக்கசப்புஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியில் ஜடேஜாவின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிடும் என்று முன்னாள் வீரர்கள் பலர் தெரிவித்தனர். இது தொடர்பாக சமூக ஊடகங்களி்ல் ஏராளமான விவாதங்கள் கிளம்பின.
இந்த போட்டியில் தோல்விக்குப்பின் கேப்டன் தோனியிடம், ஜடேஜா இல்லாதது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் “ சிஎஸ்கே அணியில் ஜடேஜாவுக்கு தனிப்பட்ட இடம் இருக்கிறது. அவர் தவிர்க்க முடியாத வீரர். பல்வேறு விதமான தருணங்களில், இக்கட்டான நேரங்களில் ஜடேஜா அணிக்காக விளையாடி வெற்றி தேடித்தந்துள்ளார். எந்த நிலையிலும் களமிறங்கி விளையாடக்கூடியவர். சிஎஸ்கே அணியில் ஜடேஜாவின் இடத்தை நிரப்புவது மிகக் கடினம். அவரைப் போல் யாரும் பீல்டிங் செய்ய முடியாது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் என்ற பேச்சுக்கே இடமில்லை” எனத் தெரிவித்தார்
2022ம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ஜடேஜா ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்டு, இந்த சீசனுக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். ஆனால், 8 போட்டிகளில் சிஎஸ்கே அணி 6 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது. ஜடேஜாவும் தனது பந்துவீச்சு, பேட்டிங் ஃபார்மையும் இழந்தார். இதையடுத்து, ஜடேஜாவிடம் இருந்து கேப்டன் பதவி தோனிக்கு மீண்டும் மாற்றப்பட்டது. தோனி தலைமையில் தற்போது சிஎஸ்கே அணி 3 ஆட்டங்களில் 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது.