தொடரும் தோனியின் கவலை.. என்ன செய்றதுனு தெரியாம விழி பிதுங்கும் “தல”
ஐபிஎல் 11வது சீசன் விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு ஆண்டுகால தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணி, 7வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பிளே ஆஃப் சுற்றுக்கு ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய 4 அணிகளும் தகுதி பெற்றன. முதல் தகுதி சுற்று போட்டியில் ஹைதராபாத் அணியும் சென்னை அணியும் நேற்று மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சீசன் தொடங்கியதிலிருந்து இறுதி ஓவர்களில் ரன்களை வாரி வழங்கிய சென்னை அணி, இந்த போட்டியிலும் அதையே செய்தது. பேட்டிங்கில் சிறந்து விளங்கும் சென்னை அணி, இறுதி ஓவர்களில் பவுலர்களின் சொதப்பலால் சில போட்டிகளில் எதிரணிகளுக்கு வெற்றியை தாரை வார்த்தது. சென்னை அணி பவுலர்கள் இறுதி ஓவர்களை வீசுவது குறித்த தனது அதிருப்தியை பலமுறை வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார் கேப்டன் தோனி.
தோனியின் கடைசி ஓவர் குறித்த கவலையை ஓரளவிற்கு தீர்த்து வைப்பவர் நிகிடி மட்டுமே. நிகிடி தான் தோனியின் நம்பிக்கைக்குரிய டெத் ஓவர் பவுலராக உள்ளார். நிகிடியை தவிர மற்ற பவுலர்கள் கடைசி ஓவர்களில் ரன்களை வாரி வழங்கிவிடுகின்றனர்.
அப்படியான சம்பவம் நேற்றும் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானை, முதல் பந்திலேயே வெளியேற்றி, அந்த அணியை மெர்சலாக்கியது சென்னை அணி. அதன்பிறகு கோஸ்வாமி, வில்லியம்சன், மனீஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹாசன், யூசுப் பதான் ஆகியோரை சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து வெளியேற்றிய சென்னை பவுலர்கள், கடைசி ஓவர்களில் பிராத்வைட்டை அடிக்கவிட்டனர். அதிலும் இந்த தவறை மீண்டும் மீண்டும் செய்பவர் ஷர்துல் தாகூர் தான்.
17 ஓவருக்கு 6 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் என்ற நிலையில் இருந்தது ஹைதராபாத் அணி. 18வது ஓவரை தாகூர் வீசினார். இந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் உட்பட 17 ரன்கள் எடுக்கப்பட்டது. நிகிடி வீசிய 19வது ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 20வது ஓவரை தாகூர் வீசினார். அந்த ஓவரிலும் பிராத்வைட் அடித்து நொறுக்கிவிட்டார். கடைசி ஓவரில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உட்பட 20 ரன்கள் எடுக்கப்பட்டது. அதனால் ஹைதராபாத் அணியின் ஸ்கோர் 139 ஆனது.
இது எளிமையான ஸ்கோராகாவே இருந்தாலும், அதை எடுக்கவே சென்னை அணி சிரமப்பட்டது. டுபிளெசிஸ் நிலைத்து நின்று ஆடவில்லையென்றால், இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. எவ்வளவு குறைந்த ஸ்கோரையும் டிஃபெண்ட் செய்யும் அளவிற்கு ஹைதராபாத் அணி சிறந்த பவுலர்களை கொண்டுள்ளது. ஒருவழியாக சென்னை அணி வெற்றி பெற்றுவிட்டாலும், நேற்றைய போட்டியிலும் சென்னை அணியின் டெத் ஓவர் பவுலிங் மிகவும் மோசமாகத்தான் இருந்தது.
தோனியின் கவலை நீடித்துக்கொண்டே இருக்கிறது. இறுதி போட்டியிலும் இதே நிலை தொடர்ந்தால், சற்று கடினம்தான்.