சி.எஸ்.கே மீண்டும் சாம்பியனாக வேண்டும் - புதிய பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்ஸி விருப்பம்...
சென்னை சூப்பர் கிங்க்ஸ் மீண்டு சாம்பியனாக வேண்டும் என்று அந்த அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய மற்றும் சிஎஸ்கே அணிகளின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி விருப்பம் தெரிவித்துள்ளார்.
இரண்டு வருட தடைக்குப் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 11-வது சீசனில் மீண்டும் களமிறங்குகிறது.
ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய 2008-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற எட்டு சீசன்களிலும் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். இரண்டு முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது. மேலும், இருமுறை 2-ஆம் இடம் பிடித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்து நடைபெறவுள்ள 11-வது சீசன் ஐபிஎல் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் ஜனவரி 27, 28 ஆகிய தேதிதகளில் பெங்களூருவில் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து, 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை 11-வது சீசன் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும்.
இதனிடையில், ஒவ்வொரு அணியும் வீரர்களை தக்க வைக்கும் நடைமுறைக்கு அனுமதி வழங்கப்பட்டதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதன் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தக்க வைத்தது.
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய மற்றும் சிஎஸ்கே அணிகளின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி (42) நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து மைக்கேல் ஹஸ்ஸி, "சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற ஐபிஎல் சீசனில் மீண்டும் களமிறங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதுபோல ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள் என்பதை நான் அறிவேன்.
அதிலும் குறிப்பாக நான் மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்புவதில் இரட்டிப்பு மகிழ்ச்சி. அணி வீரர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, திறமையை ஊக்குவித்து பயிற்சி அளிப்பது சிறந்த பணியாகும். இதன்மூலம் சிஎஸ்கே மீண்டும் சாம்பியனாக வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.