cricketer ravindra jadeja wife beaten by a police in Gujarath
குஜராத்தில் கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியை போலீஸ் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா தற்போது ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டிக்கான முதல் தகுதி சுற்று போட்டியில் விளையாட தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. சென்னை அணி மும்பையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியில் ஜடேஜாவின் மனைவி ரிவபா காரில் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் சென்ற கார் முன்னாள் சென்று கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அகிர் என்பவர் பைக் மீது மோதியது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைத்தொடர்ந்து ஜடேஜா மனைவி காரை விட்டு இறங்கினார்.

அப்போது ஆத்திரமடைந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஞ்சய், ஜடேஜா மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். பொதுமக்கள் அவரை தடுக்கும் வரை தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் ஜடேஜாவின் மனைவி காயமடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து ஜடேஜா மனைவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் மீது தாக்குதல் நடத்தியதாக போலீஸ் கான்ஸ்டபிள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒரு பெண் என்றும் பாராமல் பொது இடத்தில் தாக்கிய போலீஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
