வந்துட்டாரு வார்னர்.. பச்சை கொடி காட்டிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்ட வார்னர் மற்றும் 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்ட பான்கிராஃப்ட் ஆகிய இருவரும் உள்நாட்டு போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முறைப்படி அனுமதி வழங்கியது.
கடந்த மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஆடியது. அப்போது கேப்டவுனில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டும் பான்கிராஃப்டுக்கு 9 மாதங்களும் கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டது.
அதனால், வார்னரும் ஸ்மித்தும் ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. ஆனால் கனடாவில் நடந்துவரும் போட்டிகளில் ஆட ஸ்மித்துக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்தது. இதையடுத்து ஸ்மித் கனடா சென்றுள்ளார்.
அதேபோல தடைவிதிக்கப்பட்ட வார்னர் மற்றும் பான்கிராஃப்ட் ஆகியோரும் உள்நாட்டு போட்டிகளில் ஆட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முறையான அனுமதியை வழங்கியுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் நடக்கும் கீழ்மட்ட அளவிலான, அதேசமயம் அங்கீகாரம் பெற்ற டி20, ஒருநாள் போட்டிகளில் இருவரும் பங்கேற்கிறார்கள்.