காமன்வெல்த் அப்டேட்: துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்று ஆதிக்கம் செலுத்தும் இந்தியா...
காமன்வெல்த் விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் தலா ஒரு தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர்.
இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வென்று குவித்து வருகின்றது.
இதன் மகளிர் டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் ஷ்ரேயாசி சிங் இறுதிச்சுற்றில் 96 ரவுண்டுகள் சுட்டு ஆஸ்திரேலியாவின் எம்மா காக்ஸை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். ஸ்காட்லாந்தின் லிண்டா பியர்சன் வெண்கலம் வென்றார்.
அதேபோன்று, ஆடவர் துப்பாக்கி சுடுதல் டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் அங்கூர் மிட்டல் 53 ரவுண்டுகள் சுட்டு வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான முகமது அசாப் 4-வது இடத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
ஆடவர் 50 மீ. பிஸ்டல் பிரிவில் ஓம் மித்ரவால் வெண்கலப் பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீராங்கனையான வர்ஷா மகளிர் டபுள் டிராப் பிரிவில் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை தவற விட்டார்.
துப்பாக்கி சுடுதலில் அதிகளவு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றதன் மூலம் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.