காமன்வெல்த் போட்டிகளில் கலந்துகொள்ளவிருந்த இந்திய தடகள வீராங்கனைகளான தனலக்‌ஷ்மி மற்றும் ஐஸ்வர்யா பாபு ஆகிய இருவரும் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டது சோதனையில் கண்டறியப்பட்டதால் அவர்கள் இருவரும் காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

காமன்வெல்த் 2022 விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடக்கவுள்ளது. வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 வரை இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் நடக்கிறது. 72 நாடுகளிலிருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பலவேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுகின்றனர்.

இந்திய தடகளத்தை பொறுத்தமட்டில் 36 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்ளவிருந்தனர். அவர்களில் இருவர் ஊக்கமருந்து பரிசோதனையில் சிக்கியதால் 34 தடகள வீரர்கள் இந்தியா சார்பில் கலந்துகொள்கின்றனர்.

இதையும் படிங்க - காமன்வெல்த் 2022 போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள்..! முழு பட்டியல் இதோ

100மீ ஓட்டம் மற்றும் 4*100மீ தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ளவிருந்த தமிழகத்தை சேர்ந்த தனலக்‌ஷ்மி ஊக்கமருந்து எடுத்துக்கொண்டு பரிசோதனையில் தெரியவந்ததால், காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, கர்நாடகாவை சேர்ந்த ஐஸ்வர்யா பாபு என்ற டிரிபிள் ஜம்ப் வீராங்கனையும் ஊக்கமருந்து எடுத்துக்கொண்டது, பரிசோதனையில் கண்டறியப்பட்டது. எனவே அவரும் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க - காமன்வெல்த்தில் கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம்! 1.2 மில்லியன் டிக்கெட் விற்பனை

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தனலக்‌ஷ்மி சேகர், தேசியளவில் பல பதக்கங்களை வென்றவர். டோக்கியோ ஒலிம்பிக்கிலும் இந்தியாவிற்காக விளையாடினார்.

ஐஸ்வர்யா பாபுவும் டிரிபிள் ஜம்ப்பில் பல்வேறு பதக்கங்களை வென்றிருக்கிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடந்த தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.